நாம் சிறியதோர் ஐயமுமின்றிக் கிறிஸ்துவானவர் விரைவில் வருவாரென்று விசுவாசிக்கின்றோம். இது கட்டுக்கதை அல்ல; உண்மை. அவர் வரும்பொழுது, அவர் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைச் சுத்தகரிக்கவோ நம்முடைய குணத்தின் குறைபாட்டை நீக்கவோ, நம்முடைய கோபதாயங்கள் தன்மைகள் ஆகியவற்றின் பலஹீனங்களிலிருந்து நம்மைக் குணமாக்கவோ மாட்டார். நம்மிலே இந்தக் கிரியை நடப்பிக்கப் படுவதானால், அந்நாள் வருமுன்பாக அது நிறைவேற்றப்பட வேண்டும். CCh 564.1
கர்த்தர் வருகிற பொழுது, பரிசுத்தமாயிருக்கிறவன் பரிசுத்தமாகவே இருப்பான். தங்கள் சரீரங்களையும் ஆவிகளையும் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலையும் கனத்தையும் அடைந்தவர்கள் அழியாமையை முடிவாக அடையப் பெறுவர். அநீதியுள்ளவர்களும் அசுத்தமாயிருக்கிறவர்களும் அவ்வாறு அசுத்தமாக என்றென்றும் இருப்பார்கள். அவர்களுடைய குறைபாட்டை நீக்கிப் பரிசுத்த குணத்தை அவர்களில் உருவாக்க அப்பொழுது கிரியை நடப்பிக்கப்படமாட்டாது. தவணையின் காலத்திலே தானே இவை செய்து நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைக்கே நம்மில் இக்கிரியை நடப்பிக்கப்பட வேண்டும். CCh 564.2
நீதிக்கும் தூய நடத்தைக்கும் கிருபையின் வளர்ச்சிக்கும் எதிராகப் பகைமை கொண்டுள்ள ஓர் உலகில் நாம் வாழுகின்றோம். எத்திசையில் நோக்கினும், பழுதான தன்மையுடைய நடத்தையும் அசுத்தமும் சீர்கேடும் பாவமும் மலிந்துள்ளன. அழியாமையைப் பெறுவதற்கு முன்னதாக இங்கே நாம் செய்து நிறைவேற்ற வேண்டிய வேலை யாது? இந்தக் கடை நாட்களில் நம்மைச் சூழ்ந்து நிற்கின்ற சீர்கேடுகளின் நடுவே நமது சரீரங்களைப் பரிசுத்தமாகவும் ஆவியைத் தூய்மையுடையதாகவும் காத்து நிற்க வேண்டும். CCh 564.3
“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடையே ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” 1 கொரி. 6:19, 20. CCh 565.1
நாம் நம்முடையவர்கள் அல்ல. தேவகுமாரனின் பாடுகளும் மரணமும் ஆகிய ஓர் அருங்கிரயத்திற்கு நாம் கொள்ளப்பட்டோம். இதை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ளக் கூடுமானால், தெய்வத்திற்கு ஏற்ற நற்பணி செய்யத்தக்கதாக் மிகவும் நன்முறையில் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வைப்பது நமது பெரும் பொறுப்பென்று உணருவோம். ஆயினும் நமது போக்கினால் நமது ஆயுளைக் குறைக்கவோ நமது பலம் குன்றவோ செய்வோமானால் அல்லது நமது புத்தியை மந்தமடைச் செய்வோமானால் நாம் தேவனுக்கு விரோதமான பாவத்தைச் செய்தவர்களாவோம். இத்தகைய போக்கினால் அவருடையவைகளாகிய நமது சரீரங்களினாலும் ஆவியினாலும் நாம் அவரை மகிமைப் படுத்தாமல் அவருடைய பார்வையில் பெரும் தவறு செய்தவர்களாவோம். 2T 354, 356. CCh 565.2