தெய்வப் பிரமாணாத்தை மனிதர் அதிகமான அவமதிக்கத் தலைப்படும் பொழுது, அதைக் கடைப்பிடிப்பவர்களையும் அதைக் கடைப்பிடியாதவர்களையும் பிரித்துக் காட்டுகின்ற எல்லைக் கோடு முன்னிலும் தெளிவாகக் காணப்படும். தெய்வீகப் பிரமாணங்களின் பேரில் கொண்டுள்ள அன்பு ஒரு வகுப்பினரிடத்திலே அதிகரிக்கையிலே, மற்றொரு வகுப்பார் அவற்றின் மேல் கொண்டுள்ள வெறுப்பும் அதிகரிக்கிறது. CCh 703.1
ஆபத்து விரைந்து நம்மை அணுகுகின்றது. மிகவும் அதிகரித்துக்கொண்டே போகும் நியாயத்தீர்ப்புகளின் எண்ணிக்கை கடவுள் தண்டனை விதிக்கும் நாள் அனேகமாக வந்த்தென்று காட்டுகின்றது. தண்டிப்பதற்கு அவருக்கு மனமில்லாதே போனாலும் அவர் துரிதமாகவும் நிச்சயத்துடனும் தண்டிப்பார். CCh 703.2
தெய்வம் பழிவாங்கும் நாள் நமது பேரில் வந்திருக்கின்றது. தேசத்திலே செய்யப்படுகின்ற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றிகளிலே மாத்திரம் தேவனுடைய முத்திரை இடப்படும். உலகின் மீது அனுதாபமுடையவர்களாக விருப்பவர் வெறியரோடே புசிக்கிறவர்களும் குடிக்கிறவர்களுமாக விருப்பதால் அக்கிரம செய்கைக்காரர்களுடனே நிச்சயமாக அழிவை அடைவர். “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.” 1 பேதுரு 3:12, CCh 703.3
நம்முடைய கிரியைகளின் போக்கே ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை நாம் பெறுவோமோ, அன்றி அழிவுக்குரிய ஆயுதங்களினால் அழிக்கப்படுவோமோ என்று தீர்மானிக்கும். தேவ கோபாக்கினையின் சில துளிகள் பூமியின் மேலே விழுந்துள்ளன. இரக்கக் கலப்பு இல்லாமல் கடைசி ஏழு வாதைகளும் அவருடைய கோபாக்கினையின் பாத்திரத்திலே ஊற்றப்படும் பொழுது மனந்திரும்புவதற்கும் அடைக்கலத்தை தேடுவதற்கும் மிகவும் பிந்திப் போகும். பிராயச்சித்த பலியின் இரத்தத்தினால் பாவக் கறைகளைக் கழுவுவதற்கு அப்பொழுது கூடாமற் போகும். CCh 704.1
ஓய்வு நாளைக் கைக்கொள்ளுவதாகப் பெயர் பெற்றுள்ள அனைவரும் முத்திரையிடப்படுவதில்லை. சத்தியத்தைப் போதனை செய்கின்ற போதகர்மாருள்ளும் அனேகர் தங்கள் நெற்றிகளில் தெய்வ முத்திரையைப் பெற மாட்டார்கள். அவர்கள் சத்திய வெளிச்சத்தைப் பெற்றிருந்தார்கள். நம்முடைய விசுவாசத்தின் அம்சங்கள் யாவையும் அவர்கள் நன்கறிந்திருந்தனர். என்ற போதிலும் அவற்றிற்கு ஏற்ப அவர்கள் கிரியை நடப்பிக்காதே போனார்கள். தெய்வ ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களையும் தீர்க்க தரிசனங்களையும் நன்கறிந்தவர் தங்கள் விசுவாசத்தைச் செயல்படுத்த வேண்டும். இருதயத்திலுள்ள சத்தியத்தின் செல்வாக்கு உலகத்திற்குச் செல்லுபடியாக ஒழுங்கு படுத்தப்பட்ட குடும்ப வாழ்க்கையின் மூலம் தங்களைப் போல இருக்கும்படி அவர்கள் தங்கள் வீட்டாருக்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும். CCh 704.2
தங்களுடைய பிரதிஷ்டை குறைவினாலும் தேவதா பக்திக் குறைவினாலும் ஆவிக்குரிய அளவின் உயர் நிலையை அடைவதற்கு அவர்கள் தவறி, பிற ஆத்துமாக்கள் தங்கள் நிலையில் திருப்தியுள்ளவர்களாகும்படி செய்கின்றனர். கடவுளுடைய திரு வசனத்தின் பொக்கிஷங்களைத் தங்கள் முன்பாக மீண்டும் மீண்டும் திறந்து வைத்தவர்களாகிய இம் மனிதரின் மாதிரியைப் பின்பற்றுகிற குறைவான நிதானமுடைய மனிதர் நிச்சயமாகத் தங்கள் ஆத்துமாக்களுக்கு இவர்கள் கண்ணி வைப்பார்கள் என்று அறியாதிருக்கின்றனர். இயேசுவே உத்தம முன் மாதிரி. கர்த்தர் தங்களிடத்திலே எதிர் பார்ப்பது யாதென்று அறிவதற்கு, தாழ்மையும் கற்றுக்கொள்ளும் குழந்தையின் ஆவியுமுடையவர் ஒவ்வொருவரும் முழங்காலிலே நின்று, தங்கள் நலத்தின் பொருட்டு வேதாகமத்தை அவர்கள் ஆராய வேண்டும். தெய்வ தயவினால் எவ்வளவாக நிலைகொண்டிருந்த போதகராயினும், சிறு குழந்தை போதனை பெறுவது போலவே போதனை அடைவதையும், கடவுள் தனக்கு அளித்த ஒளியையும் தள்ளி விடுவாராகில், அவர் இருளிலும் சாத்தானின் வஞ்சகங்களிலும் அகப்படுவதுமல்லாமல், பிறரையும் தனது பாதையிலெயே நடத்துவார். CCh 704.3
நம்முடைய குணங்களிலே யாதொரு மாசு அல்லது கறை இருக்குமானால், நாம் தேவனுடைய முத்திரையைப் பெற முடியாது. நம்முடைய குணங்களில் இருக்கும் குறைவுகளை நீக்கி, ஆத்துமாவை அதின் ஒவ்வொரு அசுத்தமும் நீங்கச் சுத்திகரிப்பது நமது பேரில் விழுந்த கடமையாகவிருக்கின்றது. இதை நாம் செய்து நிறைவேற்றும் பொழுது, பெந்தெகோஸ்தே நாளிலே அப்போஸ்தலர்களில் பேரில் முன்மாரி பொழியப்பட்டது போலவே, நமது பேரில் பின் மாரி பொழியும். CCh 705.1
ஒருவராவது தான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை நடத்தக் கூடாத அளவில் தன் காரியத்திலே நம்பிக்கைக்கு இடமில்லாமற் போயிற்று என்று சொல்லக்கூடாது. கிறிஸ்துவின் மரணாத்தின் மூலம் ஆத்துமாவிற்கு வேண்டுவதெல்லாம் சவதரித்து வைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு உதவி தேவையாகிற பொழுதெல்லாம் அவர் ஏற்ற துணையாகவிருக்கின்றார். விசுவாசத்துடனே அவரிடத்திலே வேண்டுதல் செய் யுங்கள். அவர் உங்களுடைய பிரார்த்தனையைக் கேட்டு, அவற்றிற்கு பதிலளிப்பார். CCh 705.2
ஓ, உயிருள்ள ஊக்கமுள்ள விசுவாசம் தேவை! அது நமக்கு அத்தியாவசியம். நாம் அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அன்றி சோதனையின் நாளிலே நாம் சோர்வடைந்து தவறுதல் செய்வோம். அப்பொழுது நமது பாதையைச் சூழுகின்ற நிழல் நம்மை அதைரியப்படுத்தவோ நம்பிக்கையற்றவர்களாக்கவோ கூடாது. நிறைவுடைய ஆசீர்வாதங்களை அளிப்பதற்கு தம்முடைய மகிமையாகவிருக்கும் கிறிஸ்துவானவரைத் தெய்வம் அனுப்பும் பொழுது, அதை மூடுகின்ற திரையாக இந் நிழல் காட்சியளிக்கின்றது. கடந்த கால அனுபவத்திலிருந்து இதை நாம் அறிந்திருக்க வேண்டும். கடவுள் தம்முடைய ஜனத்துடனே போராடுகின்ற அந்நாளிலே இந்த அனுபவம் நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் ஊற்றாக விளங்கும். CCh 706.1
நம்மையும் நம்முடைய பிள்ளைகளையும் உலகத்தினால் கறைப்படாமல் காத்துக்கொள்ளுவதற்குக் காலம் இதுவே. இப்பொழுதே நாம் நம்முடைய அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே அடித்துத் தோய்த்து வெள்ளையாக்கிக் கொள்ளவேண்டும். அகந்தையையும், காமதாபத்தையும், ஆவிக்குரிய மந்தத்தையும் நாம் இப்பொழுதே மேற்கொள்ள வேண்டும். இப்பொழுதே நாம் விழித்துக்கொண்டு, குண நிறைவு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள்.” எபி. 3:7,8,15. CCh 706.2
ஆயத்தப்படுவதற்குக் காலம் இதுவே. அசுத்தமுடைய ஒரு மனுஷன் அல்லது ஸ்திரீயின் நெற்றியில் தெய்வ முத்திரை இடப்படுவதில்லை. உலக சினேகம், பேராசையுடைய ஆண் பெண்களின் நெற்றியிலே ஒரு போதும் தெய்வ முத்திரை இடப்படுவதில்லை. கள்ள நாவு அல்லது வஞ்சக இருதய முடைய ஆண் பெணகளின் நெற்றியிலே அது ஒரு போதும் வைக்கப்படுவதில்லை. முத்திரையைப் பெறுகிறவர்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக மாசற்றவர்களாயிருக்க வேண்டும். என் சகோதர சகோதரிகளே, முன்னேறிச் செல்லுங்கள். ஆயத்தமடையுமாறு உங்கள் கவனத்தைத் திருப்புவதற்கு இந்த கருத்துக்களைக் குறித்து சுருக்கமாக எழுதுவதே என்னால் கூடியது. இந்த வேளையின் பயங்கர பக்தி வினயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளக் கூடுமாறு வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். 5T 209, 212-216. CCh 706.3