Go to full page →

மூன்றாம் தூதனின் கடைசி எச்சரிப்புகள்!, ஜனவரி 12 Mar 23

“இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்; அவனுடைய மகிமையினால், பூமி பிரகாசமாயிற்று.” - வெளிப்படுத்தல் 18:1. Mar 23.1

மூன்றாம் தூதனின் தூதைக் கூறியறிவிக்கின்ற தூதனோடு, இணைந்து வேலைசெய்கின்ற தூதன், தனது மகிமையால் இந்த முழு உலகத்தையும் வெளிச்சமடையச்செய்ய வேண்டியதிருந்தது. உலகம் முழுவதையும் உள்ளடக்கியதான ஒரு பணியும், வழக்கத்திற்கு மாறான வல்லமையும் இங்கே முன்னறிவிப்பாகக் கொடுக்கப்படுகிறது. 1840-44-ல் ஏற்பட்ட அட்வெந்து இயக்கமானது, தேவனுடைய வல்லமையைக் காட்டும் ஒரு மகிமையான வெளிப்படுத்தலாகும். முதலாம் தூதனின் தூதானது, உலகிலுள்ள ஒவ்வொரு இறைப்பணித் தளத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதச் சீர்திருத்தக் காலத்திலிருந்து, மற்ற நாடுகளில் காணப்பட்டதுபோன்ற மாபெரும் மார்க்க சம்பந்தமான மார்க்க சம்பந்தமான எழுச்சி சில நாடுகளில் காணப்பட்டது; ஆனால், மூன்றாம் தூதனின் இறுதி எச்சரிப்பிற்கடியில் வருகின்ற மாபெரும் வல்லமையுள்ள இயக்கமானது, மேற்கூறப்பட்டவைகள் அனைத்தையும் மிஞ்சிவிடும்.. Mar 23.2

சுவிசேஷத்தின் மாபெரும் பணியானது, அதின் ஆரம்பக்கட்டத்தில் காணப்பட்ட தேவனுடைய வல்லமையைவிட, அது முடிவுபெறும் வேளையில் எத்தகைய குறைந்த வல்லமையோடும் இருக்காது. சுவிசேஷம் ஆரம்பமான காலக்கட்டத்திலே, பெய்த முன்மாரியின் பெருமழையின்போது, தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதலை அடைந்ததுபோல, சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுதலின் முடிவு வேளை வரும்பொழுது, பெய்யும் பின்மாரியின் பெரும் மழையிலே, மீண்டும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதலை அடையும்... Mar 23.3

தேவனுடைய ஊழியக்காரர்கள் பரிசுத்த அர்ப்பணிப்போடு, ஒளி நிறைந்த - பிரகாசமுள்ள முகத்தினராக, பரலோகத்தின் செய்தியை அறிவிக்க, இடம்விட்டு இடம் துரிதமாகச் சென்றார்கள். பூமி முழுவதும் ஆயிரமாயிரம் குரல்களின் மூலமாக எச்சரிப்பு கொடுக்கப்படும். அற்புதங்கள் நடப்பிக்கப்படும்; பிணியாளிகள் குணமடைவார்கள்; அடையாளங்களும் அற்புதங்களும் விசுவாசிகளைப் பின்தொடரும்; சாத்தானும் மனிதருக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணும் அளவிற்கு பொய்யான அற்புதங்களை நடப்பிக்கிறான் (வெளிப்படுத்தல் 13:13). இவ்வாறாக, பூமியின் குடிகள் ஒரு தீர்மானமெடுக்கும் நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள்... Mar 24.1

இறைப்பணியாளர்கள் மூலமாக, எங்கும் வழங்கப்பட்ட அச்சுப்பிரதிகள் அவைகளின் செல்வாக்கைப் பரப்பியிருந்தன; எனினும், மனதிலே உணர்த்தப்பட்ட அநேகர், சத்தியத்தை முழுவதுமாக விளங்கிக் கொள்வதினின்றும் அல்லது அதற்குக் கீழ்ப்படிவதினின்றும் தடுக்கப்பட்டிருந்தார்கள்; இப்பொழுது, ஒளியின் கதிர்கள் எங்கணும் ஊடுருவிச் செல்கின்றன. சத்தியமானது அதின் தெளிவான நிலையில் காணப்படுகின்றது. தேவனுடைய உண்மையான பிள்ளைகள் தங்களைக் கட்டிப்போட்டிருந்த தளைகளை அறுத்தெறிகிறார்கள். குடும்பத் தொடர்புகளும் சபைத் தொடர்புகளும் அவர்களைத் தடைசெய்யக்கூடாமல் சக்தியற்றுப் போயின. மற்றும் அனைத்துக் காரியங்களையும்விட, சத்தியமே மிகவும் அருமையானதாக இருக்கிறது. சத்தியத்திற்கு எதிராக அநேக சக்திகள் ஒருங்கிணைந்து நின்றபோதிலும், அநேகர் ஆண்டவரின் பக்கம் நிற்பதைத் தெரிந்துகொண்டார்கள்.⋆ Mar 24.2

வாக்குத்தத்த வசனம்: Mar 24.3

“தீமையை விட்டுவிலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.” - சங்கீதம் 37:27. Mar 24.4