“ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.” - வெளிப்படுத்தல் 22:14. Mar 651.1
கடைசியிலே பரலோகம் சென்றடைந்து, அங்கிருக்கிற பாடல்குழுவிலே சேர்ந்துகொள்ள எதிர்பார்த்திருக்கின்றோமா? குணத்தைப் பொறுத்தமட்டில், கல்லறைகளுக்குள் போகும்வண்ணமாகவே நாம் எழுந்து வருவோம்... நம்மைக் கழுவி, சீர்படுத்த இதுவே நேரமாகும்... Mar 651.2
தேவனுடைய சிங்காசனத்தையும் அதைச் சுற்றிலுமிருக்கிற பெருங்கூட்டத்தையும் யோவான் பார்த்தார்; “இவர்கள் யார்?” என்று கேட்டார். “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளி. 7:14) என்கிற பதில் வந்தது...கிறிஸ்து அவர்களை ஜீவத்தண்ணீர்களண்டைக்கு நடத்திச்செல்கிறார். அங்கே தான் ஜீவவிருட்சம் இருக்கிறது. நமது அருமையான மீட்பரும் இருக்கிறார். தேவனுடைய ஜீவியத்தோடு அளவிடப்படும் அந்த வாழ்வு இங்குதான் நமக்கு வழங்கப்படுகிறது. அங்கே வேதனை இல்லை, துக்கமில்லை, வியாதியில்லை, மரணமில்லை; அனைத்தும் சமாதானமாகவும் இணக்கமாகவும் அன்போடும் காணப்படுகிறது... Mar 651.3
நித்தியஜீவனுக்காக, நம் குணங்களை கட்டுவதற்காக, நம்முடைய மானிட முயற்சிகளோடு சேர்ந்து பிரயாசப்படத் தேவையான, கிருபையையும் பலத்தையும் வல்லமையையும் இணைத்துப் பெற்றுக்கொள்ளதக்கதான காலம் இதுவே. இந்த ஆயத்தத்தை நாம் செய்யும்பொழுது, தேவனுடைய தூதர்கள் நமக்கு ஊழியஞ்செய்வார்கள். நாம் தேவனுக்கு சுதந்தரரும் இயேசு கிறிஸ்துவிற்கு உடன் சுதந்தரருமாயிருப்போம்; இப்படியிருக்க கடைசி எக்கானம் தொனித்து, மரித்தவர்கள் தங்கள் சிறைவீட்டிலிருந்து அழைக்கப்படும்போது, ஒரு நொடியிலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாவார்கள். அழியாத நித்திய மகிமையின் கீரிடம் ஜெயங்கொள்கிற ஒவ்வொருவருடைய சிரசின்மீதும் வைக்கப்படும். சத்தியத்தைக் கைக்கொண்டநீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக, முத்தினாலான கதவுகள் திறந்துகொள்ளும்; இறுதிப்போராட்டமும் முடிவடைகிறது. Mar 651.4
“வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” - மத்தேயு 25:34. இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு வேண்டுமா? எனக்கு வேண்டும். நீங்களும் அதை விரும்புவீர்களென்று நான் நம்புகிறேன். இவ்வுலகில் நல்ல போராட்டத்தைப் போராடவும், ஒவ்வொரு நாளும் வெற்றிபெறவும், உங்கள் கீரிடங்களை இயேசுவின் காலடியில் வைத்து, பொற்சுரமண்டலங்களைமீட்டி, பரலோகத்தை மகிழ்ச்சியின் கீதங்களால் நிரப்பவும், ஆண்டவர் உங்களுக்கு அருள்செய்வாராக! என் இயேசுவை நீங்கள் நேசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்... என் இரட்சகரைப் புறக்கணித்து விடாதீர்கள். உங்களுக்காக முடிவில்லாத கிரயத்தைச் செலுத்தி இருக்கிறார். நான் இயேசுவிலே இணையில்லாத அழகைக் காண்கிறேன். அதே அழகை, மகிமையை நீங்களும் காணவேண்டும் என்று விரும்புகிறேன்.⋆ Mar 652.1
வாக்குத்தத்த வசனம்: Mar 652.2
“கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.” - சங்கீதம் 125:1. Mar 652.3