Go to full page →

சமயத்திற்கேற்ற செய்தி TamChS 184

நம் திருச்சபை அங்கத்தினர்கள் அனைவரையும், மூன்றாம் தூதனுடைய தூதை நம்புகிற அனைவரையும், ஓய்வுநாளைவிட்டு வழிவிலகிச்செல்கிற அனைவரையும் ஏசாயா ஐம்பத்தெட்டாம் அதிகாரத்தின் செய்தியைக் கவனிக்கும்படி வலியுறுத்தாமல் என்னால் இருக்கமுடியாது. TamChS 184.1

இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள நற்பணி ஊழியத்தைத் தான் இந்தச் சமயத்தில் தம் மக்கள் செய்ய தேவன் எதிர்பார்க்கிறார். இது அவரே நியமித்து ஓர் ஊழியம். இந்தச் செய்தி எந்தக் காலத்திற்கு பொருந்தக்கூடியது, இது எப்போது நிறைவேறுகிறது என்பது குறித்து நமக்கு எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. ஏனென்றால், ‘உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வ முதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர்பெறுவாய்’ என்று வாசிக்கிறோம். TamChS 184.2

ஏழாம் நாள் ஓய்வுநாளும், உலகச்சிருஷ்டிப்பில் அவருடைய கிரியைக்கு அடையாளமுமான தேவனுடைய நினைவுச் சின்னத்தை பாவ மனுஷன் மாற்றிவிட்டான். தேவபிரமாணத்தில் ஏற்பட்ட திறப்பைச் சரிசெய்கிற ஒரு விசேஷித்த பணி அவருடைய மக்களுக்கு உண்டு. காலத்தின் முடிவு நெருங்கநெருங்க, இந்தப் பணியைச் செய்யவேண்டிய அவசரமும் அதிகரிக்கிறது. தேவன்மேல் அன்பு கூருகிற அனைவரும், அந்த அடையாளம் தங்களிடம் இருப்பதை அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதன்மூலம் காட்டுவார்கள். அவர்கள் குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதையும் மெய்யான மருத்துவ நற்செய்தி ஊழியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. கற்பனைகளில்தான் ஓய்வு நாள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது; அது தேவனுடைய சிருஷ்டிப்புக் கிரியையின் மாபெரும் நினைவுச்சின்னமாகும். மனிதனுக்குள் தேவனுடைய ஒழுக்கச்சாயலைப் புதுப்பிக்கிற பணியோடு சம்பந்தப்பட்ட நாள் அது. இந்தக்காலத்தில் தேவ மக்கள் மும்முரமாகச் செய்யவேண்டிய ஓர் ஊழியம் இது. இந்த ஊழியத்தை மிகச்சரியாகச் செய்தால், திருச்சபைக்கு மிகப்பெரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். 16T, 265,266 TamChS 184.3