Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்து மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்!, நவம்பர் 24

    “ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், ...ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” என்று முன்னறிவித்தான். - யூதா 14:15.Mar 655.1

    ஆயிரவருட முடிவில், கிறிஸ்து மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார். மீட்கப்பட்டவர்களும், தூதர் சேனைகளும் அவரோடுகூட வருகிறார்கள். அச்சமடையச்செய்யும் கெம்பீரத்தோடு இறங்கிவருகிற அவர், துன்மார்க்கர்-மரித்த துன்மார்க்கர் தங்கள் தண்டனையைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களை எழுப்புகிறார். கடற்கரை மணலைப்போன்ற-எண்ணிலடங்காத-திரள்கூட்டமான-பெரிய சேனை எழும்பி வருகிறது. முதல் உயிர்த்தெழுதலில் எழுந்தவர்களுக்கும், இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! நீதிமான்கள் அழியாத இளமையையும், அழகையும் தரித்திருந்தார்கள். துன்மார்க்கரோ, வியாதியும் மரணத்தின் சாயலையும் கொண்டிருக்கிறார்கள்.Mar 655.2

    அந்தத் திரளான கூட்டத்தார் அத்தனைபேருடைய கண்களும் தேவகுமாரனுடைய மகிமையைக் காண்கிறது. “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று எல்லோரும் ஒரே குரலில் சொல்லுகிறார்கள். இயேசுவின்மேலிருக்கிற அன்பினாலே அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. சத்தியத்தின் உந்துதல் அவர்களை அவ்வாறு சொல்லவைக்கிறது. துன்மார்க்கர் எப்படி கல்லறைகளுக்குள் போனார்களோ, அப்படியே-அதே கலகத்தின் ஆவியோடு-கிறிஸ்துவின்மேல் கொண்ட பகையோடு-எழும்பி வருகிறார்கள். கடந்தகாலத்தில் உண்டாயிருந்த குணக்குறைவுகளை நிவர்த்திசெய்யும்படி, அவர்களுக்குப் புதிதாக கிருபையின் காலம் கொடுக்கப்படாது. அப்படிக் கொடுத்தாலும், அதனால் எந்த ஒரு பயனும் இராது. வாழ்நாள்முழுவதும் அவர்கள் நடப்பித்த மீறுதல்கள் அவர்களது இதயங்களைச் மென்மையாக்கவில்லை; எனவே, இரண்டாம் கிருபையின் காலம் கொடுக்கப் பட்டாலும், முதலாவதைப்போலவே தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகிறதற்கும், அவருக்கு எதிராக கலகஞ்செய்வதற்குமாக அது செலவிடப்படுமே தவிர, வேறொன்றுக்கும் உதவாது.Mar 655.3

    கிறிஸ்து தமது உயிர்த்தெழுதலுக்குப்பிறகு ஒலிவமலையின் மீது ஏறித்தான் பரலோகம் சென்றார்; அங்கேதான் அவருடைய இரண்டாம் வருகைக்கான வாக்குத்தத்தமும் கொடுக்கப்பட்டது. அதே மலையின்மேல் அவர் இறங்குகிறார். “என் தேவனாகிய கர்த்தர் வருவார். தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.”;“அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரேயிருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி, ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காக, எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும், ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்...”;“அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் இராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்” (சகரியா 14:5,4,9) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான். புதிய எருசலேம், ஜொலிக்கிற அதின் பிரகாசத்தோடு வானத்திலிருந்து இறங்கி வந்து, சுத்திகரிக்கப்பட்டு ஆயத்தஞ்செய்யப்பட்ட இந்த இடத்திலே வந்தமரும். கிறிஸ்து, தமது மக்களோடும் தூதர்களோடும் அந்த பரிசுத்த நகரத்திற்குள் பிரவேசிக்கிறார்.⋆Mar 656.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 656.2

    “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும்.” - தானியேல் 12:3.Mar 656.3