“…நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.” - மத்தேயு 24:29. Mar 285.1
நமது மீட்பர், தமது இரண்டாம் வருகையின் அடையாளங்கள் என்று வாக்குத்தத்தங்கொடுத்திருந்தவைகளில், கடைசி அடையாளம் 1833-ம் ஆண்டு காணப்பட்டது. நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் என்று இயேசு கூறினார். வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவனுடைய நாளை அறிவிக்கின்ற காட்சிகளைத் தரிசனத்தில் கண்ட யோவான்: “அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது” (வெளி. 6:13) என்று உறுதிபடக் கூறினார். இந்தத் தீர்க்க தரிசனமானது 1833-ம் ஆண்டில், நவம்பர் 13-ம் நாளில், மாபெரும் விண்கற்களின் விழுகையினாலே, கருத்தைக் கவரும் விதத்தில், மனதில் ஆழ்ந்து பதியத்தக்கதான முறையில், நிறை வேறுதலையடைந்தது. எழுதிவைக்கப்பட்ட குறிப்புகளிலே நட்சத்திர வீழ்ச்சியானது, கவர்ச்சிமிக்க அற்புதமான காட்சியாகவும், மிகவும் பரவலாகவும் காணப்பட்டது. “வானமண்டலப் பகுதி அனைத்திலும் பல மணி நேரங்களாக அனல் கக்குகின்ற ஒரு கொந்தளிப்பானது அமெரிக்க ஐக்கிய நாடு முழுவதிலும் காணப்பட்டது. அமெரிக்காவில் முதல் குடியேற்றம் ஏற்பட்ட காலத்திலிருந்து, வானத்திலே இத்தகைய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் அந்த நாட்டில் என்றுமே நடைபெற்றது இல்லை. சமுதாயத்திலே ஒரு வகுப்பார் இத்தகைய காட்சியை ஆழ்ந்த வியப்போடும் அல்லது மற்றுமொரு வகுப்பார் அதை அதிக பயத்தோடும் அதிர்ச்சியோடும் நோக்கிப்பார்த்தனர்.” “அதின் மேம்பாடும் அச்சந்தரும் அழகும் இன்னும் அநேக உள்ளங்களில் நீடித்து நிற்கிறது” (இந்தப் புத்தகம் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது)…விண்கற்கள் பூமியை நோக்கி விழுந்த அடர்த்தியைவிட, மழைகூட ஒருபோதும் அவ்வளவு அடர்த்தியாகப் பெய்தது இல்லை. இந்த விண்கற்கள் சொரிந்த நிலையானது, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் ஒன்றுபோலவே காணப்பட்டது. வானமண்டலமும் முழுவதுமே ஒரு அசைவிலே இருப்பதுபோலக் காணப்பட்டது. பேராசிரியர் சில்லிமேனின் பத்திரிக்கையில் வர்ணிக்கப்பட்ட அந்தக் காட்சியில், வட அமெரிக்கா முழுவதிலும் காணப்பட்டதென்று விவரிக்கப்பட்டுள்ளது… இரவு 2 மணியிலிருந்து அகன்ற பகல் வெளிச்சம்வரைக் காணப்பட்டது…கண்ணைக் கூசவைக்கும்-பளப்பளப்பான பிரகாசமான-மின் ஒளிர்வுகள், வானமண்டலம் முழுவதும் ஒரு தொடர்ச்சியாக நிலைபெற்றிருந்தது. —RM.Devens, American Progress; or the Greatest Century,ch.28, paras.1-5. Mar 285.2
அவரது வருகையின் அடையாளங்களின் கடைசிக் காட்சியானது இவ்வாறு முனைப்பாகக் காட்டப்பட்டது. இதைக்குறித்து தமது சீடர்களுக்கு இயேசு பின்வருமாறு கூறினார்; “அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவா சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்” என்று அறியுங்கள்-மத்தேயு 24:33. இந்த அடையாளங்களிக்குப்பிறகு, அடுத்து வரப்போகும் மாபெரும் சம்பவமாக, வானம் சுருட்டப்பட்டப் புத்தகம்போன்று விலகிப்போயிற்று; பூமி அதிர்ந்தது; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின; துன்மார்க்கர் பயங்கரம் நிறைந்தவர்களாக மனுஷகுமாரனுடைய பிரசன்னத்தினின்று விலகி ஓட விரும்பினார்கள். Mar 286.1
ஆனால் கிறிஸ்து அவரது வருகையின் நாளையாவது, நாழிகையையாவது வெளிப்படுத்தவில்லை…மனுஷகுமாரனின் இரண்டாம் வருகையின் சரியான நேரமானது, தேவனுடைய இரகசியமாக இருக்கிறது.⋆ Mar 286.2
வாக்குத்தத்த வசனம்: Mar 286.3
“…அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்” - ஏசாயா 46:11. Mar 286.4