“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.” - ஏசாயா 8:20. Mar 295.1
தேவனுடைய மக்கள் வேதவாக்கியங்களினிடத்திற்கு வழி நடத்தப்படுகிறார்கள். இருளின் சக்திகள் ஏமாற்றும் வல்லமைகளுக்கும், பொய்யான போதகர்களுக்கும் எதிரான வேதவாக்கியங்களே அவர்களது பாதுகாப்பாகும். வேதாகமத்தைப்பற்றிய அறிவை மனிதர் பெற்றுக்கொள்ளாதபடி, சாத்தான் —தான் செய்யக்கூடிய அனைத்து உபாய தந்திரங்களையும் பயன்படுத்துகிறான்; ஏனெனில், வேதவாக்கியங்களில் காணப்படும் தெளிவான விளக்கங்கள் அவனது வஞ்சகங்களை வெளிப்படுத்துகின்றன. தேவனுடைய ஊழியத்தில் ஏற்படுகின்ற ஒவ்வொரு எழுப்புதலிலும், தீமையின் பிரபுவானவன், அதிக முனைப்போடு நடவடிக்கைகளில் ஈடுபடத்தக்கதாக விழிப்படைகிறான். கிறிஸ்துவிற்கும் அவரது பின்னடியார்களுக்கும் எதிராக நடத்துகின்ற ஒரு இறுதிப்போராட்டத்தில், இயலும் அளவிற்கு சாத்தான் முயற்சிகளை இந்நாட்களில் வலிமையோடு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றான். மாபெரும் கடைசி வஞ்கம் வெகுசீக்கிரத்தில் நமக்கு முன்பாக வெளிப்படவிருக்கிறது. அந்தக்கிறிஸ்து நமது கண்களுக்கு முன்பாக அவனது அற்புதமான செயல்களை நடத்திக்காட்டப்போகிறான். அந்தப் போலியானது, பெருமளவில் உண்மையைப்போன்றே காணப்படும்; எனவே, பரிசுத்த வேதவாக்கியங்களின் உதவியின்றி, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தி அறிவது மிகவும் கடினம். அவர்களது சாட்சியின்மூலமாக, அவர்களுக்குடைய ஒவ்வொரு கூற்றும், ஒவ்வொரு அற்புதமும், சோதித்தறியப்பட வேண்டும்… Mar 295.2
அற்புதஞ்செய்யப்படுவதை தனது விசுவாசத்திற்கான பரீட்சை என வைத்துக்கொண்டிருக்கும் நபர், வகைவகையான வஞ்சகங்கள் மூலமாக, உண்மையான அற்புதங்களைப்போன்று தோற்றங் கொடுக்கக்கூடிய அற்புதங்களை, சாத்தானும் செய்யக்கூடும் என்பதைக் காண்பான். Mar 295.3
சாத்தான் தந்திரமாக வேலைசெய்கிறவன். உள்ளத்தைக் குழப்பி-இருட்டடித்து, மீட்பிற்கான மூலக்கோட்பாடுகளை வேரோடு பிடுங்கத்தக்கதாக, சூழ்ச்சிநிறைந்த போலி வாதங்களைக் கொண்டுவருவான். வேதவாக்கியங்கள் எப்படிக் கூறுகிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவனுடைய கண்ணியிலே அகப்பட்டுக்கொள்வார்கள். Mar 295.4
ஒவ்வொரு கணத்திலும் தீயதூதர்கள் நமது பாதையிலே வந்துகொண்டிருக்கிறார்கள்…அவர்கள் புதிய களத்தை எடுத்தவர்களாக, நமது கண்களுக்கு முன்பாக வியக்கத்தக்க நிகழ்ச்சிகளையும் அற்புதங்களையும் செய்துகாட்டுவார்கள்… Mar 296.1
சிலர் இந்த அற்புதங்கள் தேவனிடத்திலிருந்து வருகிறதென்று எண்ணி, ஏற்றுக்கொள்ளத்தக்கதாக சோதிக்கப்படுவார்கள். நமது கண்களுக்குமுன்பாக பிணியாளிகள் குணமாக்கப்படுவார்கள்; நாம் காணும்படியாக அற்புதங்கள் செய்யப்படும். சாத்தானின் பொய்யான அற்புதங்கள் முற்றிலுமாக வெளியரங்கமாகத் தக்கதாக நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய சோதனையைச் சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்கிறோமோ? அநேக ஆத்துமாக்கள் கண்ணியில் அகப்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்டுவிடமாட்டார்களோ? தேவனுடைய தெளிவான கொள்கைகளினின்றும், கட்டளைகளினின்றும் வழி விலகிச்சென்று, கட்டுக்கதைகளின்மீது கவனஞ்செலுத்துவதினால், அநேகருடைய உள்ளங்கள் இத்தகைய பொய்யான அற்புதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றன. வெகு சீக்கிரத்தில் ஈடுபடப்போகிற அந்தப் போராட்டத்திற்காக, நாம் அனைவரும் இப்பொழுதே அதற்கு எதிரான கவசத்தை அணிந்துகொள்ள நாடவேண்டும். தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்து, ஜெபத்தோடு அதைப்படித்து, செயல் முறையில் அதைக் காட்டுவோமானால். அதுவே சாத்தானுடைய வல்லமையினின்று காக்கக்கூடிய கேடகமாக நமக்கு அமையும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக, நாம் வெற்றியாளர்களாகக் கொண்டு வரப்படுவோம்.⋆ Mar 296.2
வாக்குத்தத்த வசனம்: Mar 296.3
“…நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத் தண்டையிலே சேரக்கடவோம்.” - எபிரெயர் 4:15,16. Mar 296.4