“சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.” - 1 கொரிந்தியர் 14:40. Mar 451.1
நீங்கள் விவரித்த இந்தக் காரியங்கள்… இவைகள் தவணையின் காலம் முடிவடைவதற்கு சற்றுமுன்னர் நடைபெறும் என்பதை ஆண்டவர் எனக்குக் காட்டினார். ஒவ்வொரு அருவருப்பான காரியமும், செயல்முறையில் தெளிவாக எடுத்துக்காட்டப்படும். கூச்சலிடுவது, கொட்டடிப்பது (Drum), நடனமாடுவது இசை ஆகியவை அரங்கேறும். பகுத்தறிவுள்ள மக்களது புலன்கள் மிகவும் குழப்பமடையும். அவர்கள் சரியான தீர்மானங்கள் எடுப்பார்களென்று நாம் நம்பமுடியாது; மேலும், இது பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல் என்றும் கூறப்படும். Mar 451.2
இத்தகைய முறைகளில், பைத்தியக்கார விடுதியினின்று வெளிவரும் கூச்சலைப்போன்ற நிலையில், பரிசுத்த ஆவியானவர் தம்மை ஒருபோதும் வெளிப்படுத்துகிறதில்லை. இந்தக்காலத்திற்குரிய தூய்மையான-மெய்யான-மேம்படச் செய்கின்ற —உயர்தரமாக்குகின்ற-பரிசுத்தமாக்குகின்ற சத்தியத்தைப் பயனற்றதாக மாற்றிப்போடும்படி, தனது சூழ்ச்சிநிறைந்த வழிமுறைகளால் சாத்தானால் உருவாக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பாகும்… இத்தகைய பைத்தியக்கார விடுதியினின்று வரும் கூச்சலைப்போன்றிருக்கும் இசை, புலன்களை அதிர்ச்சியடையச்செய்கிறது. நல்ல முறையில் நடத்தப்பட்டால், ஒரு ஆசீர்வாதமாக அமையவேண்டியதை தாறுமாறாக்கிப்போடுகின்றது. இத்தகைய சத்தத்தோடும் கூச்சலோடும் சாத்தானிய கூட்டங்களின் வல்லமையும் சேர்ந்துகொள்ளுகின்றன; ஆனால், இது பரிசுத்த ஆவியானவரின், கிரியை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது…! Mar 451.3
எழுப்புதல் என்று எண்ணப்படும் இந்தக் கூட்டத்தில் பங்கெடுப்பவர்கள், சில எண்ணப்பதிவுகளைப் பெறுகிறார்கள்; இவ்வாறாக, அவர்கள் அலைப்புண்டு போகிறார்கள். வேதாகமத்தின் மூலக்கோட்பாடுகளைப்பற்றி இதற்கு முன்பாக இவர்கள் என்ன அறிந்திருந்தார்கள் என்பதையும் இவர்களால் கூறமுடியாது. Mar 451.4
இவ்வகையான தொழுகைக்கு எவ்விதமான ஊக்கங்களும் கொடுக்கக்கூடாது. 1844-ம் ஆண்டிலே, அந்த ஏமாற்றத்தின் வேளை கடந்துசென்றபிறகு, இதேவிதமான செல்வாக்கு மீண்டும் வந்தது. இதேபோன்ற அரங்கக் காட்சிகள் நடைபெற்றன. மனிதர் பரபரப்போடு செயல்பட்டனர். தேவ வல்லமையென்று எண்ணிக்கொள்ளப்பட்ட வல்லமை அவர்களிலே கிரியை செய்தது.! Mar 452.1
பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்பதாக உத்தேசிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் இருந்து கூட்டங்களை நடத்தினார்கள். “பரிசுத்த மாம்சம்” (Holy flesh) என்பதைப்பற்றி அவர்கள் பேசினார்கள்; சோதனைக்குட்படும் நிலைக்கும் அப்பாற்பட்ட நிலையில் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டார்கள்; பாடினார்கள்; கூச்சலிட்டார்கள்; பலவிதமான செயல்முறைகளில் உரத்த கூச்சலோடு காரியங்களை நடப்பித்தார்கள். இத்தகைய வேலைக்கு சாத்தான் உருக்கொடுத்துக்கொண்டிருந்தான். மட்டுக்குமீறிய சிற்றின்பமான வாழ்வே அதின் விளைவாக இருந்தது. தேவனுடைய ஊழியம் அவமதிக்கப்பட்டது. சத்தியம், பரிசுத்த உண்மைகள் ஆகியவை மானிடப் பிரதிநிதிகளால் மண்ணோடு மண்ணாகப் படிந்துபோயிற்று. Mar 452.2
இத்தகைய கொள்கை வெறியோடுகூடிய இயக்கங்கள், இரைச்சல்கள், கூச்சல்கள் ஆகியவை கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கின்ற சாத்தானால் ஏவிவிடப்பட்டவை என்றும், நான் எனது சாட்சியை உறுதியாகக் கூறியறிவிக்கிறேன். Mar 452.3
நாம் சாத்தானின் உபாய தந்திரங்களால் வஞ்சிக்கப்படாதபடிக்கு, கிறிஸ்துவோடு ஒரு நெருக்கமான உறவைப் பேணிக்காத்துக்கொள்ளத்தக்கதாக, மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியமாகும். தமது ஆராதனையானது பரபரப்போடும் குழப்பத்தோடுமல்ல; ஒழுங்கோடும் கிரமத்தோடும் நடத்தப்படவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார்.⋆ Mar 452.4
வாக்குத்தத்த வசனம்: Mar 452.5
“வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.” - ஏசாயா 59:19. Mar 452.6