“அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது, சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும் படிக்கும்... புறப்படுவான்...” - வெளிப்படுத்தல் 20:7,8. Mar 657.1
ஆயிரவருடங்களின் முடிவிலே, இரண்டாம் உயிர்த்தெழுதல் நடைபெறும். பின்னர், துன்மார்க்கர், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பின் முடிவைப் பெற்றுக்கொள்ளும்படி எழுப்பப்படுவார்கள். நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலை விவரித்தபின்பு, “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்” (வெளி. 20:5) என்று யோவான் சொல்லுகிறார். ஏசாயாவும் துன்மார்க்கரைக் குறித்து, “அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்ற பின்பு விசாரிக்கப்படுவார்கள்” (ஏசாயா 24:22) என்று கூறுகிறார். Mar 657.2
தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான கடைசி மாபெரும் போராட்டத்திற்கு, சாத்தான் இப்பொழுது ஆயத்தமாகிறான். ஏமாற்று வேலைகள் செய்யக்கூடாதபடிக்கு அடைக்கப்பட்டிருந்த தீமையின் அதிபதி, மிகுந்த விசனமடைந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டான்; ஆனால் இப்பொழுதோ, மரித்த துன்மார்க்கர் எழுப்பப்பட்டு, பெரும் திரளான கூட்டம் தன்பக்கம் நிற்கிறதைப் பார்க்கிற அவன், மீண்டும் நம்பிக்கை கொண்டு, இந்தப் போராட்டத்திலே இழந்துபோகக்கூடாது என்று தீர்மானிக்கிறான். பரலோகத்தை இழந்துபோன அத்தனைபேரையும் தனது கொடியின்கீழ் சேர்த்துக்கொண்டு, அவர்கள்மூலம் தன் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிசெய்கிறான். துன்மார்க்கர் சாத்தானின் கைதிகளாக இருக்கிறார்கள். கிறிஸ்துவைப் புறக்கணித்ததின்மூலமாக, கலகக்குணமுள்ள சாத்தானையே அவர்களுக்குத் தலைவனாகத் தெரிந்துகொண்டார்கள். எனவே, அவனுடைய ஆலோசனையின்படி செய்வதற்கு அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்; இப்பொழுதுங்கூட, ஆரம்பகாலத்தில் அவன் காட்டிய தந்திரத்திற்கு ஒப்பாக, அவன் தன்னை சாத்தான் என்று காட்டிக்கொள்ளவில்லை; மாறாக, தான்தான் இந்த உலகத்தின் அதிபதி என்றும், சட்டவிரோதமாக அது அவனிடமிருந்து பிடுங்கப் பட்டிருக்கிறது என்றும் உரிமைபாராட்டுகிறான். ஏமாற்றமடைந்த அந்தக் கூட்டத்தாரை, தான் மீட்கப்போவதாகவும், தன்னுடைய வல்லமைதான் அவர்களைக் கல்லறைகளிலிருந்து வெளிப்படப்பண்ணினதாகவும், தான் அவர்களை இப்பொழுது கொடூரமான ஆட்சியிலிருந்து காப்பற்றப்போவதாகவும் அறிவிக்கிறான். கிறிஸ்துவின் பிரசன்னம் சற்றுநேரம் அங்கில்லாதிருந்தபோது அவன் சில அற்புதங்களையுஞ்செய்து, தன்னுடைய ஆதிக்கத்தை நிருபிக்கப் பார்க்கிறான். பெலவீனமானவர்களைப் பெலனடையச் செய்து, தனது ஆவியினாலும் பலத்தினாலும் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறான். பரிசுத்தவான்கள் தங்கியிருக்கிற பட்டணத்திற்கு எதிராக அவர்களை நடத்திச்சென்று, தேவனுடைய நகரத்தை பிடித்துக்கொள்ளத் திட்டமிடுகிறான். பேய்த்தனமான ஆக்ரோஷத்தோடு தன்னோடிருக்கும் உயிர்த்தெழுந்த எண்ணிலடங்காத ஜனக்கூட்டத்தைக் காண்பித்து, அவர்களுக்கு தானேதான் தலைவன் என்றும், இத்தனைபேர் இருப்பதினால், வெகு எளிதாக பட்டணத்தைப் பிடித்து, தனது அரசாட்சியை ஸ்தாபிக்க முடியும் என்றும் கூறுகிறான்.⋆ Mar 657.3
வாக்குத்தத்த வசனம்: Mar 658.1
“இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.” - சங்கீதம் 27:6. Mar 658.2