“இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.” - யோவான் 5:17. Mar 683.1
பரலோகம், உற்சாகமான செயற்பாடுகள் நிறைந்த ஓர் இடம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தவர்களுக்கும், களைத்துப்போனவர்களுக்கும், விசுவாசத்தில் நல்ல போராட்டத்தைப் போராடியவர்களுக்கும் அது ஒரு மகிமையான இளைப்பாறுதலின் இடமாக இருக்கும்; இனி அவர்கள் நித்திய இளமையோடும் ஆற்றலோடும் இருப்பார்கள். பாவத்தோடும், சாத்தானோடும் இனி ஒருக்காலும் அவர்கள் போராடவேண்டியதில்லை. இப்படி புத்துணர்சியோடிருப்பவர்களுக்கு, நித்திய காலமாக சோம்பலாயிருப்பது என்பது வெறுப்பூட்டுவதாயிருக்கும்,.. அவர்களுக்கு அது பரலோகமாயிராது. Mar 683.2
ஆதியிலே தேவன் ஏதேன் தோட்டத்தில் வாசஞ்செய்தவர்களை, “அதைப் பண்படுத்தவும் அதைக் காக்கவும்” வைத்தார். அவர்களது வேலை களைப்பூட்டுவதாயிராமல், இனிமையாகவும் புத்துணர்ச்சி வழங்குவதாகவும் இருந்தது. மனிதனின் மனநிறைவிற்காகவும், உடல் வலிமைக்காகவும், திறனை வளர்ப்பதற்காகவும் உழைப்பை ஒரு ஆசீர்வாதமாக தேவன் ஏற்படுத்தினார். தன் பரிசுத்த வாழ்க்கையின் உன்னத மகிழ்சிகளில் ஒன்றாக, தன் சரீர மற்றும் மனதின் செயற்பாடுகளை ஆதாம் உணர்ந்தான். Mar 683.3
உழைப்பு வேதனையையும் களைப்பையும் தருவதாக இருந்தாலும், அதை சாபமாக எண்ணுவது தவறு. ஐசுவரியவான்களின் பார்வையில் பெரும்பாலும், உழைப்பாளிகள் கீழ்த்தரமாக எண்ணப்படுவர்; ஆனால், தேவன் மனிதனை உண்டாக்கிய நோக்கத்திற்க்கு அது முற்றிலும் முரணானது. உலகத்தில் மிகுந்த செல்வந்தர்களுடைய உடைமைகளை பெருமகனான ஆதாமின் சுதந்திரவீதத்தோடு ஒப்பிடமுடியுமா? இருப்பினும், ஆதாம் சோம்பலாயிருக்க அனுமதியில்லை. மனிதனின் மகிழ்ச்சிக்கு எது தேவை என்பதை உணர்ந்திருந்த நம் சிருஷ்டிகர், ஆதாமிற்கு அவனது வேலையை நியமித்தார். உழைக்கும் ஆண்களாலும் பெண்களாலும் மட்டுமே, வாழ்க்கையின் மெய்யான மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும். Mar 683.4
பரலோகத்தில் இடைவிடாது வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சோம்பெறிகள் அங்கு இல்லை; “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்” என்றார் கிறிஸ்து. நாம் இறுதி வெற்றிவாகை சூடி, நமக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட மாளிகைகளைச் சுதந்தரித்துக்கொள்ளும்பொழுது, வேலை ஒன்றுமில்லாமல் சோம்பி இருக்கும் நிலை நமது பங்காக இருக்கும் என்று எண்ணிவிடக்கூடாது. Mar 684.1
தேவன் அனைவரையும் உழைப்பவர்களாக உருவாக்கியிருக்கிறார். பாரஞ்சுமந்து கடின வேலைசெய்யும் மிருகம், சோம்பேறியான மனிதனை விட மேன்மையாக, தான் உண்டாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவற்றுகிறது. தேவன் இடைவிடாது கிரியை செய்கிறார்; தூதர்கள் வேலை செய்கிறார்கள்; அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாக மனுப்புத்திரருக்கு வேலை செய்கிறார்கள். பரலோகத்தில் வேலை எதுவுமின்றி இருக்கலாமென்ற எதிர்பார்ப்போடு செல்பவர்களுக்கு அங்கு ஏமாற்றமே; ஏனென்றால், பரலோகத்தின் ஒழுங்குபட்ட நடைமுறையிலே, சோம்பேறிகளுக்கு இடமில்லை; ஆனால், வருத்தப்பட்டு பாரஞ்சுமந்தவர்களுக்கு இளைப்பாறுதல் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டுள்ளது. உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனுக்கு, அவன் எஜமானின் சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்கான வரவேற்பு காத்திருக்கும்.⋆ Mar 684.2
வாக்குத்தத்த வசனம்: Mar 684.3
“எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.” - நீதிமொழிகள் 1:33. Mar 684.4