Go to full page →

அத்தியாயம் 8 - கிறிஸ்துவின் விசாரணை GCt 19

தூதர்கள், பரலோகத்திலிருந்து கிளம்பியபோது, தங்கள் ஜொலிக்கும் கிரீடங்களை இறக்கி வைத்தார்கள். தங்களுடைய அதிகாரி முட்கிரீடத்தை அணிந்திருக்கும் வேளையில், தங்களது பொற்கிரீடங்களை அவர்கள் அணிய இயலாதல்லவா? சாத்தானும் அவனுடைய தூதர்களும் அந்த விசாரணை அறையிலே மனிதத்தன்மையையும், அனுதாபத்தையும் அழித்துவிட வேண்டு மென்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். மனித இயல்பினால் தாங்க இயலாத விதத்தில் அவதூறான சொற்களினாலும், அவமானத்தினாலும் இயேசுவை தாக்குமாறு பிரதான ஆசாரியர்களையும், மூப்பர்களையும், சாத்தான் தூண்டிவிட்டான். இத்தகைய பாடுகளின் நிமித்தமாக, இயேசு தனது அதிருப்தியை காட்டுவார் என்றும், முனுமுனுப்பார் என்றும் சாத்தான் எதிர்பார்த்தான். அல்லது, தமது வல்லமையை வெளிக்காட்டி, இக்கொடிய கும்பலிலிருந்து தப்பிவிடுவார் என்றும் எதிர்பார்த்தான் இஃது இரண்டில் எது நடந்தாலும், மீட்பின் திட்டம் தோல்வியடைந்துவிடும் என்று சாத்தான் எதிர்பார்த்தான். GCt 19.1

இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட பின்பு, பேதுரு இயேசுவை தொடர்ந்து வந்தான், இயேசுவை என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதில் மிகவும் ஆவல் கொண்டிருந்தான். இயேசுவின் சீடர்களில் அவனும் ஒருவன் என யாரோ கூறிய போது, பேதுரு அதை மறுத்தான். தனது ஜீவனைக் குறித்து அவன் பயந்தான். எனவே, சீடர்களில் அவனும் ஒருவன், என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, இயேசுவை தனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்தான். சீடர்கள் வாக்கில் உண்மையுள்ளவர்கள். எனப்பெயர் பெற்றிருந்தார்கள். இதனை பயன்படுத்தி, மூன்றாம் முறையாகவும் இயேசுவை தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் பண்ணினான். அச்சமயத்தில், சற்றே தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த இயேசு அவனை வருத்தத்தோடு பார்த்தார். அப்பொழுது, இயேசு மேல் அறையில் கூறிய வார்த்தைகளும் அதற்கு அவன் அருளிய மறுஉத்தரவும் நினைவிற்கு வந்தன. இயேசுவை மறுதலித்த பேதுரு, அவர் பார்த்த பார்வையில் உருகி, மனம்மாறினான். மனங்கசந்து அழுது, தனது பாவத்தை அறிக்கை செய்து, திருந்தி, பிறரை பெலப்படுத்தும்படியாக ஆயத்தமானான். ஜனக்கூட்டம், இயேசுவின் இரத்தத்திற்காக கூக்குரலிட்டது. அவரை கொடூரமாக வாரினால் அடித்து, ஒரு பழைய சிவப்பு அங்கியை தரித்து, சிரசில் முட்கிரீடத்தை அணிவித்தார்கள். அவருடைய கரத்தில் ஒரு நாணலை கொடுத்து, கேலியாக அவரை பணிந்து, யூதரின் ராஜாவே, வாழ்க எனக் கூறி வணங்கினார்கள். பின்பு நாணலை பிடுங்கி, தலையில் அடித்து, முட்களினால் தலை குத்தப்பட்டு, குருதி முகத்தில் தாடியின் வழியாக ஓடியதைக் கண்டேன். GCt 19.2

தேவதூதர்களுக்கு இஃது சகிக்கமுடியாத ஒரு காட்சியாக இருந்தது. இயேசுவை அவர்கள் கைகளிலிருந்து தப்புவிக்க அவர்கள் வாஞ்சித்தார்கள். ஆனால், அதிகார தூதர்கள் அதனை தடுத்து, மனிதன் சார்பில் கொடுக்கப்படவேண்டிய பிரதிக்கிரயம் அது என்றும், இயேசுவின் மரணத்தினால் அது முடியுமென்றும் அறிவித்தார்கள். தூதர்கள் தனது இழிவான அனுபவத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அத்திரளான கூட்டத்தையும் வலிமையிழக்கச் செய்ய பரலோகத்தின் மிக பெலவீனமான தூதனுக்கே வல்லமையிருந்தது. அத்தகைய விடுதலையை தான் விரும்பினால், அதை உடனே தூதர்கள் செயலாற்றுவார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகிலும், பாவிகளின் கரங்களில் அநேக பாடுகளை இயேசு அனுபவிப்பது, மீட்புத்திட்டத்தின் மிகப் பெரிய தேவையாகும். GCt 20.1

தரக்குறைவான ஏச்சுகளை வீசி, கோபத்தின் கொந்தளிப்பில் இருந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் இயேசு சாந்தமாகவும், தாழ்மையாகவும் நின்று கொண்டிருந்தார். கதிரவனை காட்டிலும் பிரகாசமான, தேவ நகரத்தையே ஒளிமயமாக்கிய இயேசுவின் அற்புத முதத்தின் மீது எச்சிலுமிழ்ந்தார்கள். ஆகிலும் தன்னை துன்பப்படுத்தியவர்களின் மீது தமதுகோபக்கணைகளை அவர் வீசவில்லை. சாந்தமாக தனது கரத்தை உயர்த்தி, எச்சிலை துடைத்துவிட்டார். ஒரு பழைய அங்கியை வைத்து அவருடைய முகத்தை மூடி, முகத்தில் அறைந்து, “உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல்”, என்று கூவினார்கள். தூதர்களிடையே மாபெரும் கோபம் எழும்பிற்று இயேசுவை உடனடியாக விடுவித்திருப்பார்கள். அவர்களுடைய அதிகார தூதன் அவர்களை தடுத்தான். GCt 20.2

சற்றே தைரியமடைந்தவர்களாக, தூதர்கள், இயேசு நின்ற அறையினுள் பிரவேசித்தார்கள். அவர், தமது வல்லமையை உபயோகித்து, தமது எதிராளிகளின் கரத்திலிருந்து தம்மை விடுவித்து, தம்மை கொடுமைப்படுத்திய நபர்களை தண்டிப்பார் என தூதர்கள் எதிர்பார்த்தார்கள். அவ்விசாரனையின் போது நடந்த ஒவ்வொரு காட்சியும், தூதர்களின் நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் மாறி மாறி தூண்டிக்கொண்டிருந்தது. ஆகிலும், இயேசு மறுரூபமாக்கப்பட்ட மலையில் எழுப்பிய சத்தத்தையும், அவரை தாங்கிய மகிமையையும் கண்டிருந்ததினால், இவர் மெய்யாகவே தேவகுமாரன்தான் என்பதை தைரியமாக விசுவாசித்தார்கள். இயேசு செய்திருந்த அநேக அற்புதங்களை தூதர்கள் எண்ணிப் பார்த்தார்கள் - சுகவீனர்களை சுகப்படுத்தியதையும், குருடர்களின் கண்களை திறந்ததையும், கேளாத செவிகளை கேட்கச் செய்ததையும், பிசாசுகளை விரட்டியதையும், மரணத்திலிருந்து எழுப்பியதையும் மனதில் கண்டார்கள். இத்தகைய வல்லமையைப்பெற்றிருந்த இயேசு, மரிக்கப்போகிறார் என்பதை நம்ப தவித்தார்கள். அவர் தமது வல்லமையை உபயோகித்து, சகல அதிகாரத்தோடும், தம்மை சூழ்ந்திருந்த இரத்த-வெறி கும்பலை விரட்டியடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். சீடர்களும் அப்படியே, இயேசு தமது அதிகாரத்தின் மூலமாக, தான் யூதர்களின் அரசன் என்பதை நிலை நிறுத்த வேண்டும் என விரும்பினார்கள். GCt 20.3

இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு, தனது தவறை உணர்ந்து மன வியாகுலம் கொண்டான். இயேசுவின் அவமானங்களை கண்டபோது, தனது பாவத்தை உணர்ந்தான். இயேசுவைக் காட்டிலும் பணத்தை அவன் நேசித்தானே! தான் அழைத்து வந்த கூட்டத்தின் கையில் சிக்கி, இத்தனை இன்னல்களை அவர் அனுபவிப்பார் என்று அவன் நினைக்கவில்லை. இயேசு ஒரு அற்புதம் செய்து, அவர்கள் கைகளில் இருந்து தப்பித்துவிடுவார் என எண்ணினான். இயேசுவை, ஆலோசனை சங்கத்தில் நிறுத்தி, அவமானப்படுத்தி, அவதூறாக பேசியதை யூதாஸ் கண்டபோது, தன் குற்றத்தை ஆழமாக உணர்ந்தவனாக அக்கூட்டத்தின் மத்தியில் வந்து, “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன்” என்று உரைத்தான். அவன் பெற்றிருந்த வெள்ளிக் காசுகளை அவர்களிடமே திருப்பித் தந்து, இயேசு குற்றமற்றவர் என்றும் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் வருந்தி வேண்டிக்கொண்டான். கோபமும், குழப்பமும் அந்த ஆசாரியர்களை சற்று நேரம் அமைதியாக்கின. இயேசுவை தங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கும்படியாக, அவர்கள் இயேசுவின் சீடன் ஒருவனையே விலைக்கு வாங்கியிருந்தார்கள் என்கிற உண்மையை ஜனங்களிடமிருந்து மறைத்துவிட வேண்டுமென்று ஆசாரியர்கள் தவித்தார்கள். இயேசுவை திருடனைப்போல வேட்டையாடியதையும், இரகசியமாக அவரை கைது செய்ததையும் மறைத்துவிட வேண்டும் என்றும் விரும்பினார்கள். ஆனால், யூதாசின் உரத்த அறிக்கை அவர்களுடைய இரகசியத்தை அம்பலப்படுத்தியது. எனினும், இயேசு அவர்கள் பிடியிலிருந்தபடியால் யூதாசை, “எங்களுக்கென்ன, அது உன் பாடு” என்று சொல்லி விரட்டினார்கள். வேதனை மிகுந்தவனாக, யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்டுகொண்டு செத்தான். GCt 21.1

அக்கூட்டத்தில், இயேசுவின் மீது அனுதாபம் கொண்டவர்கள் அநேகர் இருந்தார்கள். ஆகிலும், இயேசு கடைப்பிடித்த மௌனம், அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அத்தனை நிந்தைகள், அவமதிப்புகள் சூழ இருந்த போதும், அவருடைய முகச்சாயலில் எவ்வித கடுமையோ, குழப்பமோ தென்படவில்லை. அவருடைய தோற்றம் நேர்த்தியாகவும், பூரணமாகவும் இருந்தது. பார்வையாளர்கள் அவரை வியப்போடு பார்ததனர். அவருடைய பூரண சாயலையும், அவரை விசாரித்துவந்த அதிகாரிகளுடைய சாயலையும் ஒப்பிட்டுப் பார்த்த பார்வையாளர்கள், இயேசுவிடம் உயரிய அரசக்களை இருப்பதையும், மற்றவர்களிடம் அது இல்லாததையும் கண்டார்கள். குற்றவாளியின் சின்னங்கள் எதையும் இயேசு பெற்றிருக்கவில்லை. அவருடைய முகம் உதாரகுணமுள்ளதாயும், தயை நிறைந்ததாயும், உயரிய ரகமாயும் இருந்தது. அவருடைய பொறுமையும், சகிப்புத்திறனும் மனிதரைப் போல் இல்லாதிருந்ததைக் கண்ட யாவரும் நடுங்கினார்கள். தேவச் சாயலைப் பெற்றிருந்ததால், ஏரோதும் பிலாத்துவும் கூட, இயேசுவைப் பார்த்து கலங்கினார்கள். GCt 21.2

ஆரம்பத்திலிருந்தே, இயேசு குற்றமற்றவர் என்பதை பிலாத்து நன்கு உணர்ந்திருந்தான். அவர் முற்றிலும் களங்கமில்லாதவர் என நம்பினான். பிலாத்துவின் இத்தகைய சிந்தனைகளைக் கண்ட தூதர்கள், பிலாத்துவின் மனைவிக்கு கனவின் மூலமாக இச்செய்தியை வெளிப்படுத்தி, அதனையே பிலாத்துவிடம் கூறும்படி ஏவினார்கள். அவளும் உடனடியாக பிலாத்துவை அழைத்து, “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன்” என்று சொன்னாள். இச்செய்தியை படித்த மாத்திரத்தில், பிலாத்து கலங்கி, உற்சாகமற்றுப் போனான். இக்காரியத்தில் தனது பங்கு ஒன்றும் இருக்காது என்பதை மட்டும் உறுதிசெய்தான். எனவே அவன், தண்ணீரை அள்ளி, கைகளைக் கழுவி, தான் குற்றமற்றவன் என்று சொல்லி, இயேசுவை அவர்கள் கையில் ஒப்புக் கொடுத்தான். GCt 22.1

ஏரோது எருசலேமில் இருப்பதை அறிந்த பிலாத்து, மகிழ்ந்து, இப்பிரச்சனையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, தான் விலகிக்கொள்ள முடிவு செய்தான். அப்படியே இயேசுவையும், அவர் மிது குற்றம் சுமத்தியவர்களையும் ஏரோதிடத்திற்கு அனுப்பி வைத்தான். ஏரோதின் இருதயம் கடினப்பட்டிருந்தது. யோவான் ஸ்நானகனை அவன் கொலை செய்திருந்ததின் தாக்கம் இன்னமும் இருந்தது. இயேசுவின் அற்புதங்களைக் குறித்து கேள்விப் பட்டிருந்தபடியால். யோவான் உயிர்தெழுந்துவிட்டானோ என்கிற திகில், ஏரோதின் உள்ளத்தில் குடியிருந்தது. பிலாத்து இயேசுவை ஏரோதிடம் ஒப்படைத்தான். இச்செயலின் மூலமாக பிலாத்து, தன் அதிகாரத்தையும், நீதித்திறனையும் அங்கீகரித்துக்கொண்டதாக நினைத்து, ஏரோது நெகிழ்ந்து போனான். ஏரோதும் பிலாத்தும் எதிரிகளாக இருந்து, நண்பர்களானவர்கள். இயேசுவைக் கண்டதும் அவரிடமிருந்து பெரிய அற்புதங்களை எதிர்பார்த்து, ஏரோது சந்தோஷமடைந்தான். ஆகிலும், அவனுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இயேசுவின் கடமையாக இருக்கவில்லை. அவருடைய அற்புதங்கள் வல்லமையும் பிறருடைய இரட்சிப்புக்காக பிரயோஜனப்படுத்தப்பட வேண்டுமே தவிர, தனது விடுதலைக்காக அல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார். GCt 22.2

ஏரோது விடுத்த அநேக வினாக்களுக்கு இயேசு விடையளிக்கவில்லை. இம்மௌனத்தினால் எரிச்சலடைந்த ஏரோது, தனது போர்வீரர்களோடு சேர்ந்து இயேசுவை ஏளனம் செய்து, அவமானப் படுத்தினான். இயேசுவின் உயரிய தேவ தோற்றத்தைக் கண்டு பிரமித்த ஏரோது, அவரை குற்றப்படுத்த பயந்து, அவரை மீண்டும் பிலாத்துவிடமே அனுப்பி வைத்தான். GCt 22.3

சாத்தானும் அவனுடைய தூதர்களுமாக இணைந்து, பிலாத்துவை சோதித்து, அவனுடைய சொந்த அழிவிற்கே அவனை வழிநடத்தினார்கள். இயேசுவை குற்றப்படுத்தி, மூர்க்கமாக இருந்த மக்களிடம் கொலை செய்யப்படுவதற்காக கொடுக்காவிடில், பிலாத்து, தனது உலக கௌரவத்தையும், பதவியையும் இழக்க நேரிடும் என்று சாத்தான் கூறினான். GCt 22.4

அந்தப்படியே, தனது பதவியை தக்க வைத்துக்கொள்ளும் விதத்தில், இயேசுவின் மரணத்தை ஒப்புக்கொண்டான். இயேசுவின் இரத்தப்பழிக்கு தான் குற்றமற்றவன் என்று கூறி, அவரை ஜனங்களின் கையில் கொடுத்தான். அதற்கு ஜனங்களெல்லாரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று கூறி அவரை பெற்றுக் கொண்டார்கள். ஆகிலும், பிலாத்து தப்பிவிடவில்லை. தனது நம்பிக்கையின்படி நடந்திருந்தால், பிலாத்து, இக்குற்றச்சாட்டிலிருந்து தப்பித்திருப்பான். GCt 23.1

இயேசுவின் விசாரனையும் தண்டனையும் அநேக உள்ளங்களை பாதித்து. அவருடைய உயிர்தெழுதலுக்குப் பின் எழ வேண்டிய அதிகமான கருத்துக்களும் தோன்ற துவங்கின. இயேசுவின் பாடுகளின் சமயங்களிலிருந்து விசுவாசம் வைக்கிற அநேகர் பிற்காலங்களில் திருச்சபையில் சேர்க்கப்படுவார்கள் என்பதும் உறுதியாயிற்று. GCt 23.2

இத்தனைக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தியப் பின்பும், இயேசுவின் வாயிலிருந்து ஒரு சிறிய முறுமுறுப்பைக் கூட கொண்டுவர இயலாததினால், சாத்தான் பெருங்கோபங்கொண்டான். மனித சாயலை இயேசு ஏற்றிருந்தபோதிலும், தேவ வல்லமையைப் போல வலியைச் சகித்துக் கொள்ளும் பொறுமையை அவர் பெற்றிருந்ததையும், அதினிமித்தமாக, தமது பிதாவின் சித்தத்திற்கு புறம்பாக சற்றேனும் அவர் விலகவில்லை என்பதையும் நான் கண்டேன். GCt 23.3

பார்க்க : மத்தேயு 26 : 57-75; 27 : 1-31
மாற்கு 14:53-72; 15:1-20
லூக்கா 22:47-71; 23:1-25
யோவான் 18:1-40; 19-1-16