Go to full page →

அத்தியாயம் 22 - வில்லியம் மில்லர் GCt 61

வேதாகமத்தை அறிந்திராத ஒரு விசுவாசியின் இதயத்தில் பேசி, தீர்க்கதரிசனங்களை ஆராயும்படிக்கு தேவன் தம்முடைய தூதர்களின் மூலமாக எத்தனித்தார். தேவ ஜனங்களுக்கு அதுவரை இருளாக இருந்த தீர்க்கத்தரிசன வசனங்களை, இந்த விவசாயியின் மூலமாக தெளிவுப்படுத்த தேவன் சித்தம் கொண்டார். எனவே, தேவ தூதர்கள் அந்த விவசாயியை அடிக்கடி சந்தித்து, அவருடைய மனதையும் ஒருமுகப்படுத்தினார்கள். சத்தியச் சங்கிலியின் விளக்கங்கள் அவருக்கு அருளப்பட்டபொழுது, அச்சங்கிலியை ஒவ்வொரு கரணையாகத் தேடினார். முடிவில், தான் கண்ட விளக்கங்களினிமித்தமாக வேதத்தின் மீது ஆச்சரியமும், பிரமிப்பும் கொண்டார். வேதத்தில், சத்தியச் சங்கிலியானது பூரணப்பட்டிருப்பதைக் கண்டார். ஆவியால் அருளப்படாத வசனம் என்ற கருத்து மாறி, திரளான அழகோடும் மகிமையோடும் கர்த்தரின் வசனம் ஜொலிப்பதை கண்டுக்கொண்டார். மேலும் அவர், அவருடைய அறிவுக்கு எட்டாத ஒரு பகுதியை படிக்கும்போது, அதன் விளக்கம் மற்றொரு பகுதியில் இருப்பதைக் கண்டு நெகிழ்ந்தார். எனவே, தேவ வசனத்தை மகிழ்ச்சியோடும், ஆழமான பயத்தோடும், மரியாதையோடும் அந்த விவசாயி ஏற்றுக்கொண்டார். GCt 61.1

வில்லியம் மில்லர் என்ற இந்த விவசாயி, தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்துக்கொண்டே வந்தபொழுது, இவ்வுலகத்தின் மக்கள் தங்களுடைய சரித்திரத்தின் கடைசி பகுதியில் இருப்பதை கண்டார். இதனை எவரும் அறிந்திருக்கவில்லை. திருச்சபைகளில் நிலவிய நேர்மையற்ற நிலையை கவனித்த மில்லர், இயேசுவின் மீது வைக்கப்படவேண்டிய அன்பை உலகத்தின் மேல் வைத்திருப்பதைக் கண்டு மனமுடைந்துப் போனார். பரலோகத்திலிருந்து வரவேண்டிய கீர்த்திக்குப் பதிலாக, பூலோகக் கீர்த்தியையே சபையினர் விரும்பினார்கள். மேலோகில் சேர்க்கப்படவேண்டிய பொக்கிஷங்களுக்குப் பதிலாக, பூமியில் ஆஸ்தியை அதிகரிப்பதற்கு வகை தேடினார்கள். இருளையும், மரணத்தையும், ஏமாற்றத்தையும், அனைத்து இடங்களிலும் காணமுடிந்தது. அவன் ஆவி அவனுக்குள் கலங்கியது. எலியாவை பின்பற்றுவதற்காக தன் வயலையும் ஏர்மாடுகளையும் விட்டுச் சென்ற எலிசாவைப்போல, தானும் தனது வயல்களை விட்டு வரும்படி தேவன் அழைத்தார். நடுக்கத்துடனே வில்லியம் மில்லர், பரலோகத்தின் இரகசியங்களை ஜனங்களுக்கு தெளிவுப்படுத்தினார். ஒவ்வொரு முயற்சியின் போதும் புது பெலனடைந்த மில்லர், தீர்க்கதரிசனங்களின் வழியாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் ஜனங்களை எடுத்துச் சென்றார். இயேசுவின் முதல் வருகையை அறிவித்து, வழியை ஆயத்தம்செய்த யோவான் ஸ்நானகனை போல, வில்லியம் மில்லரும் அவருடைய சகாக்களும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கித்தார்கள். GCt 62.1

சீடர்களின் காலத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கு பிரியமான யோவானின் மீது தேவன் சுமத்தியிருந்த சிறப்பு ஊழியங்களை நான் கவனித்தேன். இந்த ஊழியத்தை தடுக்க நினைத்த சாத்தான், யோவானை அழிப்பதற்காக தனது வேலையாட்களை அனுப்பினான். ஆனால், தேவன் தமது தூதர்களை அனுப்பி யோவானை காத்துக்கொண்டார். யோவானின் விடுதலையைக் கண்ட அநேகர், ஆச்சரியப்பட்டு, நிச்சயமாகவே தேவன் யோவானோடு இருக்கிறார் என்றும், இயேசுவைப் பற்றி அவன் கூறிய சாட்சிகள் அனைத்தும் உண்மை என்றும், ஏற்றுக்கொண்டார்கள். அவனை அழிப்பதற்காக வந்தவர்கள், மீண்டும் முயற்சிப்பதற்கு பயந்தபடியால், இயேசுவிற்காக தொடர்ந்து துன்பம் அனுபவித்து வாழ ஆரம்பித்தான். எதிராளிகளால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, தனிமையான ஒரு தீவுக்கு அவன் எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு, இவ்வுலகில் சம்பவிக்க வேண்டி இருந்த கடைசிக்கால நிகழ்வுகளை ஒரு தூதன் விளக்கிக் காட்டினான். இறுதிக்காலங்களில் திருச்சபையின் அவல நிலையையும், தேவனை மகிமைப்படுத்தி சாத்தானை மேற்கொள்ள வேண்டுமானால் தேவைப்பட்ட சீர்த்திருத்தங்களையும் யோவான் கண்டான். பரலோகத்திலிருந்து வந்த தூதன் கெம்பீரமாக வந்தான். அவனுடைய முகக்குறி பரலோக மகிமையால் பிரகாசித்தது. தேவனின் திருச்சபை சந்திக்கவிருக்கும் கடைசிக்காலப்போராட்டங்களை அந்த தூதன் விளக்கிக்காட்டினான். பலவிதமான சோதனைகளுக்குட் படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் மேற்கொண்டு, தேவனுடைய ராஜ்ஜியத்தில் மகிமையாக இரட்சிக்கப்படுவதை யோவான் தெளிவுறக் கண்டான். தேவனின் திருச்சபை இறுதியாக அடையவிருக்கும் வெற்றியைக்குறித்து யோவானுக்கு காட்டப்பட்டபோது, தேவதூதனின் முகம் களிப்பினால் பிரகாசமடைந்து, மிகவும் மகிமை நிறைந்து காணப்பட்டது. திருச்சபையின் இறுதி விடுதலையைக் கண்ட யோவான், பயபக்தியோடும், தேவஅச்சத்தோடும் அத்தூதனின் பாதத்தில் பணிந்துக்கொள்வதற்காக விழுந்தான். தூதனோ அவனை உடனடியாக எருப்பி, அவனை நோக்கி, “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்து சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத்தொழுதுகொள். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது” என்று மென்மையாக கடிந்துக்கொண்டான். மேலும் தேவதூதன், யோவானுக்கு பரலோகத்தின் மகிமையை காண்பித்தான். யோவான், அந்த நகரத்தின் மகிமையைக் கண்டு பரவசமடைந்தான். இந்நிலையில், தன்னையே மறந்தவனாக மீண்டும் தூதனின் பாதத்தில் விழுந்தான். அதற்கு தூதன்,” நீ இப்படிச் செய்யாதபடிக்குப்பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்” என்று மீணடும் கடிந்துக்கொண்டான். GCt 62.2

பிரசங்கிமாரும் மக்களும், வெளிப்படுத்தின விசேஷத்தை, புதிரான புத்தகம் என்றும், வேதத்தின் பிற பகுதிகளை விட குறைவான முக்கியத்துவம் பெற்றது என்றும் கூறி வந்தார்கள். ஆகிலும், கடைசி காலத்தில் கர்த்தருடைய பிள்ளைகளை வழி நடத்தவும், கடமையை உணர்த்தவும், இப்புஸ்தகத்தை தேவன் வெளிப்படுத்தினார் என்று நான் கண்டேன். தீர்க்கதரிசனங்களை கற்ற வில்லியம் மில்லரை தேவன் வழிநடத்தி, வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள ஆழமான சத்தியங்களை அறியும்படி செய்தார். GCt 63.1

தானியேலின் தரிசனங்களை புரிந்துக்கொண்டால், வெளிப்படுத்தின விசேஷத்தின் தரிசனங்களையும் புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தேவன், குறித்த சமயத்திலே, ஒரு ஊழியக்காரனை தெரிந்துக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் அவனுக்கு தீர்க்கதரிசனங்களை விளக்கினார். வில்லியம் மில்லர் தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து படித்து, தானியேலின் புஸ்தகத்திற்கும் வெளிப்படுத்தின சுவிசேஷ புத்தகத்திற்கும் இடையே இருந்த ஒற்றுமைகளை விவரித்துக் காட்டினார். இப்படிச் செய்ததின் மூலமாக, தேவ வார்த்தையின் எச்சரிப்புகளை தெளிவுபடுத்தி, மக்களின் இருதயங்களை மனுஷகுமாரன் வரும் நாளிகைக்கென்று அயத்தப்படுத்துவதில் மில்லர் அக்கறை காட்டியதாகத் தெரிகிறது. அவனைக் கேட்ட யாவரும் தேவனிடத்திற்கு திரும்பினார்கள்; நியாயத் தீர்ப்பில் நிற்பதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்ளவும் ஆயத்தமானார்கள். GCt 63.2

வில்லியம் மில்லரின் ஊழியத்திலும் தேவ தூதர்கள் ஒத்தாசையாக இருந்தார்கள். அவர் உறுதியாகவும், அஞ்சாதவருமாக இருந்தார். அவரிடத்தில் கொடுக்கப்பட்ட ஊழியத்தை முழுமையாக செய்துமுடித்தார். துண்மார்க்கத்திலிருந்த உலகத்தையும், சிரழிந்துக்கொண்டிருந்த திருச்சபையையும் காக்கும் பொருட்டாக, தம்மீது சுமத்தப்பட்ட சிறப்பு ஊழியத்தை சோர்ந்து போகாமல் செய்தார். ஒப்புக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களாலும், உலகத்தாராலும் எதிர்க்கப்பட்டாலும், திரண்டு வந்த ஜனங்களுக்கு நித்தியமான சுவிசேஷத்தை பிரசங்கிப்பதிலிருந்து அவர் ஓயவில்லை. போகுமிடமெல்லாம் அவர், “தேவனுக்கு பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத் தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது,” என்ற செய்தியை அறிவித்துக் கொண்டே இருந்தார். GCt 63.3

பார்க்க : ஐ இராஜாக்கள் 19 : 16-21
தானியேல் 7-12 அதிகாரங்கள்
வெளிப்படுத்துதல் 1 : 1-20; 14:7;
19:8-10, 22 : 6-10