Go to full page →

அத்தியாயம் 40 - இரண்டாம் உயிர்த்தெழுதல் GCt 108

பின்பு இயேசுவும், தேவதூதர்களும், பரிசுத்தவான்களும், இப்புதிய நகரத்தை விட்டு வெளியே வந்தார்கள். இயேசு, மரித்த துன்மார்க்கரை எழுப்பினார். இந்த துன்மார்க்கர் எப்படி கல்லறைகளுக்குள் சென்றனரோ அப்படியே இப்பொழுதும் எழுந்தனர். முதலாம் உயிர்த்தெழுதலின்போது, அழியாமையை பெற்ற பரிசுத்தவான்கள் மகிழ்ந்திருந்தார்கள். ஆனால், இரண்டாம் உயிர்த்தெழுதலின்போது, சாபத்தின் அடையாளங்கள் நன்றாக வெளிப்பட்டன. இவ்வுலகின் ராஜாக்களுடனும் பிரபுக்களுடனும் சராசரி ஏழைகளும், கல்லாதவர்களும் எழும்பினார்கள். அவர்கள் அனைவரும் மனுஷகுமாரனை கண்டார்கள். இயேசுவை பரியாசம் பண்ணி, அவரை அடித்திருந்த ஒவ்வொருவரும் இப்பொழுது, இயேசுவை ராஜ மகிமையில் காண்பார்கள். அவர், தாங்கள் துன்புறுத்தி, சிலுவை மரணத்திற்கென்று ஒப்புக்கொடுத்திருந்த இயேசுதான் என்பதை உணர்ந்துக் கொள்வார்கள். அப்பொழுது, இராஜாதி இராஜாவின் சமூகத்திலிருந்து விலகியோடுவார்கள். ஒரு பெரிய புலம்பலின் சத்தம் எழும்பிற்று. GCt 108.1

முன்பு அவர்களால் நிந்திக்கப்பட்ட இயேசு, இப்பொழுது, பயங்கரமான வல்லமையோடு இருப்பதை கண்டு அதிர்ந்த துன்மார்க்கர்கள், கன்மலைகளுக்கிடையே ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும் அவருடைய மகிமையினால் பாதிக்கப்பட்டிருந்ததால், ஏகமாக கூடி, “பிதாவின் நாமத்தினாலே வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று அறிவித்தார்கள். GCt 108.2

பரிசுத்த நகரத்துக்குள் அவர்கள் மீண்டும் வந்தபோது, துன்மார்க்கரின் அழுகையும் புலம்பல்களும் தொடர்ந்தது. சாத்தான் தனது கிரியையை மீண்டும் துவங்கியதை நான் கண்டேன். அவனுடைய பிரஜைகளின் நடுவே மீண்டும் வலம் வந்து, தான் இன்னமும் வலிமை மிக்கவன் என்று விளக்கிவந்தான். சோர்வாய் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினான். அவனுடைய கூட்டத்தில் சிறந்த போர்வீரர்களும், ராஜாக்களும் இருந்தனர். எந்த போரிலும் தோல்வியடையாதிருந்த அநேகர் இருந்தார்கள். பல இராஜ்ஜியங்களை அதிரவைத்திருந்த நெப்போலியன் அங்கிருந்தான். போரில் மடிந்திருந்த வலிமையான, திறமையான, திடகாத்திரமான மனிதர்கள் அங்கிருந்தார்கள். இவர்கள், அதிகமாக கைப்பற்ற வேண்டும் என வாஞ்சித்தபோது மரித்தார்கள். அவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டபோது, மரிக்கும் நேரத்தில் என்ன சிந்தனைக் கொண்டிருந்தார்களோ, அதே சிந்தனையோடு எழும்பினார்கள். கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசையோடு இப்பொழுதும் எழும்பினார்கள். சாத்தான் தனது தூதர்களோடும், உயிர்த்தெழுப்பப்பட்ட பலவான்களோடும் ஆலோசித்தான். பின்பு அந்த திரளான கூட்டத்தைப் பார்த்து, பரலோகப் பட்டணத்தில் இருப்பவர்கள் மிக சொற்பமானவர்கள் என்பதை அறிவித்தான். ஆகையால், எளிதாக அவர்களை வென்று, அப்பட்டணத்தை கைப்பற்றி விடமுடியுமென அறிவித்தான். GCt 108.3

அவர்களை சாத்தான் வஞ்சித்தான். உடனே அனைவரும் போரிடுவதற்காக புறப்பட்டார்கள். திறமையான அநேகர் இருந்தபடியால், போராயுதங்களை உண்டுபண்ணினார்கள். பின்பு, சாத்தானின் தலைமையில் இக்கூட்டம் நகர்ந்தது. பிரபுக்களும், போர் வீரர்களும் சாத்தானின் பின்னே வர, திரளான ஜனங்கள் அவர்களை கூட்டம் கூட்டமாக பின் தொடர்ந்தார்கள். நொறுங்கிய பூமியிலிருந்து பரலோகத்திற்கு நேராக இக்கூட்டம் நகர்ந்தது. இயேசு பரலோக நகரத்தின் வாசலை அடைத்துவிட்டார். சாத்தானின் சேனை நகரத்தை சுற்றிலும் பரவினார்கள். போரின் ஆயுதங்களை தயாரித்திருந்த அவர்கள், பயங்கரமான போரை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள். இவ்வேளையில், இயேசுவும், தேவதூதர்களும், மீட்கப்பட்ட பரிசுத்தவான்களும் பரமநகரத்தின் மதிற்சுவரின் மேல் ஏறினார்கள். அங்கிருந்து இயேசு கம்பீரமாக, “மகா பாவிகளே! இதோ, நீதிமான்களுக்கு வரும் பலன்; இரட்சிக்கப்பட்டவர்களே! இதோ, துன்மார்க்கருக்கு வரும் பலன்,” என்றுரைத்தார். திரண்டிருந்த சாத்தானின் படை இந்த மகிமையைக் கண்டார்கள். பிரகாசிக்கும் கிரீடங்களையும், மகிமையான முகங்களையும் கண்ட கூட்டம், தங்களுடைய அதிபதிகளின் மகிமையற்ற தோற்றங்களை கவனித்தபடியால், அவர்களுடைய மனவலிமை குன்றிப்போயிற்று. பாவத்தின் சம்பளம் மரணம் என்றும், இத்தகைய மகிமையான இராஜ்ஜியத்தை நாம் இழந்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள். தாங்கள் நிந்தித்து, அவமானப்படுத்தி, வெறுத்து ஒதுக்கிய யாவரும் மகிமையில் இருப்பதையும், அதே வேலையில் பரிசுத்த நகரத்திற்கு வெளியே ஒன்றுமில்லாமல், திக்கற்றவர்களாய் தாங்கள் நிற்பதையும் இக்கூட்டம் உணர்ந்து பார்த்தது. GCt 109.1

பார்க்க : மத்தேயு 23 : 29
வெளிப்படுத்தல் 6 : 15, 16
வெளிப்படுத்தல் 20 : 7-9
வெளிப்படுத்தல் 22 : 12-15