ஆத்துமாக்களின் இரட்சிப்பைத் தேடக்கூடிய, ஊக்கமாக உழைக்கின்ற, உண்மையான ஆண்களும் பெண்களுமே தற்போதைய தேவையாக உள்ளது; ஏனென்றால், சாத்தானானவன் வல்லமையுள்ள ஒரு படைத் தளபதியாக போர்க்களத்திற்குள் வந்து, இந்தக் கடைசி மீதியான நேரத்திலே தேவன் தமது ஜனங்களிடத்திற்கு வரத்தக்கதாகக் கொடுக்கும் வெளிச்சத்திற்கு எதிராகக் கதவை மூடும்படியாக, தான் நினைத்துப்பார்க்ககூடிய அனைத்து வழிமுறைகளின் மூலமாகவும் கிரியை செய்து கொண்டிருக்கின்றான். அவன் முழு உலகத்தையும், தனது அணிவரிசைகளில் வாரிக்கொண்டிருக்கின்றான்; தேவனுடைய எதிர்பார்ப்புகளை உணர்ந்து உண்மையாக இருப்பவர்கள் மாத்திரமே, அவனை எப்போதும் எதிர்த்து நிற்கக்கூடியவர்களாய் இருப்பார்கள். ஆயினும் அவர்களையும்கூட மேற்கொள்வதற்கு அவன் முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். — 3SM 389 (1889). கச 123.6
சாத்தானுடைய தந்திரமான சூழ்ச்சியின்மூலம், மரித்துப் போனவர்களைப்போன்ற உருவங்கள் தோற்றமளிக்கும். பொய்யை நேசிப்பவனும் உருவாக்குபவனுமான அவனோடு அநேகர் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். நம் நடுவில் இருக்கின்ற சிலர் விசுவாசத்தை விட்டு விலகி வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுப்பார்கள். அவர்கள் மூலமாக சத்தியம் தூஷிக்கப்படும் என்பதால், நமது மக்களை நான் எச்சரிக்கின்றேன். கச 124.1
ஒரு அற்புதமான வேலை நடைபெறும். தங்களது பகுத்தறியும் சிந்தையை இப்படிப்பட்ட பொய்யான வஞ்சகங்கள் மேற்கொள்ளும்படியாக அனுமதித்துவிட்ட ஊழியக்காரர்களும், வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்களோடு இணைந்து, தாங்களும் வஞ்சிக்கிறவர்களாவார்கள். ஆவிக்குரிய ஒரு மதுமயக்கம் அவர்களை ஆட்கொள்ளும். — UL 317 (1905). கச 124.2
*****