Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    13—நெதர்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவியா!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 237-244)

    நெ தர்லாந்திலிருந்த போப்புமார்க்கத்தின் கொடுங்கோன்மை ஆரம்பகாலத்திலேயே எதிர்ப்பை உண்டுபண்ணியது. லுத்தரின் காலத்திற்கு எழுநூறு வருடங்களுக்கு முன், ரோம் நகருக்குத் தூதர்களாக அனுப்பப்பட்டு, அதன் உண்மையான குணத்தை அறிந்துகொண்ட இரு பேராயர்களால் போப்பு கடிந்துகொள்ளப்பட்டார். “தேவன் அரசியாகவும் மனைவியாகவும் இருக்கிற தமது சபைக்கு, அவளது குடும்பத்திற்கு, மேலானதும் வாடாததுமான சீதனத்தினால், உன்னதமான நிரந்தரமான ஒரு முன்னேற்பாட்டைச் செய்தார். அவளுக்கு நித்தியமான கிரீடத்தையும் செங்கோலையும் கொடுத்தார். இந்த நன்மைகள் அனைத்தையும் ஒரு திருடனைப்போல் நீங்கள் வழிமறித்துப் பிடுங்கிக்கொள்ளுகிறீர்கள். தேவனுடைய ஆலயத்தில் உங்களை நீங்களே, தேவனாக அமர்த்திக்கொண்டீர்கள். மேய்ப்பனாக இருப்பதற்குப் பதிலாக ஆடுகளுக்கு ஓநாய்களாக மாறினீர்கள். நாங்கள் உங்களை மேலான குருக்களாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு கொடுங்கோலனாக இருக்கிறீர்கள்.... உங்களை நீங்கள் அழைத்துக்கொள்ளுவதுபோல ஊழியக்காரர்களுக்கு ஊழியக்காரனாக இருக்கவேண்டிய நீங்கள், ராஜாதி ராஜாவாக முயற்சிசெய்கிறீர்கள்.... நீங்கள் தேவனுடைய கற்பனைகளுக்கு அவமதிப்பைக் கொண்டுவருகிறீர்கள்.... பூமியின் விசாலம் பரவுமிடமெங்கும் பரிசுத்தஆவியானவர் சகல களையும் கட்டுகிறவர். நாம் குடிமக்களாயிருக்கிற நமது தேவனுடைய நகரம் பரலோகத்தின் சகல சபை பகுதிகளிலும் பரவி உள்ளது. தெய்வீகமானதாக நடித்துக்கொண்டு, பரலோகத்துக்குத் தன்னை நிகராக்கி, தன்னுடைய ஞானம் அழியாதது என்று பெருமையடித்துக்கொண்டு, கடைசியாக காரணமின்றி தான் தவறே செய்யாதவள் செய்யவும் முடியாதவள் என்று சொல்லிக்கொண்டிருக்கிற, தீர்க்கதரிசிகளால் பாபிலோன் என்று பெயரிடப்பட்ட அந்த நகரத்தைக்காட்டிலும் மேலானது” என்றனர். Gerard Brandt, History of the Reformation In and About the Low Countries, b. 1, p. 6. (1)GCTam 267.1

    இந்த மறுப்பை நூற்றாண்டுகளிலிருந்து நூற்றாண்டுகளுக்கு எதிரொலிக்க மற்றவர்கள் எழும்பினார்கள். பல நாடுகளிலும் பயணித்து, பல பெயர்களால் அறியப்பட்ட அந்த ஆரம்பகால ஆசிரியர்கள் வெளடாயிஸ் மிஷனரிகளின் சுபாவத்தை உடையவர்களாக இருந்து, சுவிசேஷத் தின் அறிவை எங்கும் பரப்பி, நெதர்லாந்துக்குள்ளும் நுழைந்தனர். அவர்களது கோட்பாடுகள் விரைவாகப் பரவின. வால்டென்னியர்களின் வேதாகமத்தை அவர்கள் டச்சு மொழியில் மொழிபெயர்த்தனர். “அதில் பெரும் அனுகூலம் இருந்தது. வேடிக்கை இல்லை. வஞ்சகங்கள் இல்லை. சத்திய வசனங்களைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் அங்குமிங்குமாகச் சில கடினமானவைகள் இருந்தன. ஆனால் அதிலும் எது நல்லது எது பரிசுத்தமானது என்கிற ஊனையும் இனிமையையும் எளிதில் கண்டுகொள்ளலாம்” என்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்த பண்டைய விசுவாசத்தின் நண்பர்கள் எழுதினார்கள்.-Ibid., b. 1,p. 14. (2)GCTam 268.1

    இப்பொழுது ரோமன் கத்தோலிக்கர்களின் உபத்திரவம் ஆரம்பமானது. ஆனால் விறகுக்கட்டைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நடுவில் விசுவாசிகள் தொடர்ந்து பெருகி, மையக்கோட்பாட்டின் அதிகாரி வேதாகமம் ஒன்று மட்டும்தான் என்றும் “நம்பும்படி ஒருவரும் பலவந்தப்படுத்தப்படக்கூடாது, மாறாக, போதனையினால் வெல்லப்படவேண்டும்” என்றும் உறுதியுடன் அறிவித்தனர்.-Martyn, vol. 2, p. 87. (3)GCTam 268.2

    லுத்தரின் போதனைகள் நெதர்லாந்தில் செழிப்பான மண்ணைக் காணவே, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆர்வமும் விசுவாசமுமிக்க மனிதர்கள் எழும்பினார்கள். ஹாலந்தின் மாநிலங்களில் ஒன்றிலிருந்து மென்னோ சைமன்ஸ் என்பவர் வந்தார். ரோமகல்வியைப் பயின்று, குருவாக அபிஷேகம்செய்யப்பட்ட அவர், வேதாகமத்தைப்பற்றி முழுமையாக அறியாமலிருந்து, மதப்புரட்டு தன்னை வஞ்சித்துவிடுமென்ற அச்சத்தில் வேதாகமத்தை வாசிக்காதிருந்தார். திவ்யநற்கருணையில் இயேசுநாதர் தமது சரீரத்துடனும் இரத்தத்துடனும் எழுந்தருளுகிறார் என்னும் கோட்பாட்டைப்பற்றிய சந்தேகம் அவரைப் பலமாக நெருக்கியபோது, அதை சாத்தானால் வரும் ஒரு சோதனை எனக் கருதி, அதிலிருந்து ஜெபத்தினாலும், பாவஅறிக்கையினாலும் விடுபட முயற்சித்தார். ஆனால் அது வீண்முயற்சியாயிருந்தது. நேரத்தை விரயமாக்கும் காட்சிகளில் பங்கெடுப்பதினால் அவரைக் குற்றப்படுத்தும் மனசாட்சியின் குரலை மௌனம் அடையச்செய்ய முன்றார். அதனாலும் பயனுண்டாகவில்லை. சில நாட்களுக்குப்பின், அவர் புதிய ஏற்பாட்டை ஆராய்ந்தார். இது, லுத்தரின் எழுத்துக்களுடன் சேர்ந்து சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அதன்பின், சற்றுகாலத்தில், அயல் கிராமம் ஒன்றில், ஒரு மனிதன் மறுபடியும் ஞானமுழுக்கு எடுத்துக்கொண்டதற்காக, அவனது தலை துண்டிக்கப்பட்ட காட்சியை கண்டார். இச்செயல் குழந்தை ஞானமுழுக்கைக்குறித்து வேதாகமத்திலிருந்து ஆராய அவரை நடத்தியது. அதற்கான ஒரு சான்றையும் வேதவாக்கியங்களிலிருந்து அவரால் காண இயலவில்லை. ஆனால் மனந்திரும்புதலும் விசுவாசமும் ஞானமுழுக்கைப் பெற்றுக்கொள்ளும் நிபந்தனையாக எங்குமிருப்பதை கண்டார். (4)GCTam 268.3

    ரோம சபையிலிருந்து மென்னோ விலகி, அவர் பெற்றுக்கொண்ட சத்தியத்தைப் போதிப்பதில் தனது வாழ்க்கையைச் செலவழித்தார். ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய இரு இடங்களிலும், கீழ்த்தரமான ராஜதுரோகத்திற்குப் பரிந்துரைசெய்து, ஒழுக்கத்தையும் பண்பையும் கெடுத்து, பலாத்காரம், உட்கலகம் ஆகியவைகளை பரிந்துரைக்கும் ஒருவகையான மதவெறியர்கள் எழும்பினர். இந்த இயக்கங்கள் எப்படிப்பட்ட பயங்கரமான விளைவுகளுக்கு நடத்தும் என்பதை மென்னோ கண்டு, இந்த மதவெறியர்களின் தவறான போதனைகளையும் காட்டுத்தனமான திட்டங்களையும் விடாமுயற்சியுடன் எதிர்த்தார். எப்படியிருந்தாலும் இந்த மதவெறியர்களால் தவறாக நடத்தப்பட்ட ஆனால் நாசத்துக்கேதுவான அவர்களது கோட்பாடுகளை மறுதலித்த அநேகர் இருந்தனர். வால்டென்னிய போதனைகளின் கனிகளான பண்டைய கிறிஸ்தவர்களின் பின்தோன்றல்களாக அநேகர் இன்னமும் இருந்தனர். இந்த வகுப்பினர்களுக்கிடையில் மிகுந்த வைராக்கியத் துடனும் வெற்றியுடனும் மென்னோ ஊழியம்செய்தார். (5)GCTam 269.1

    இருபத்தைந்து வருடங்களாக அடிக்கடி தன் வாழ்க்கையில் பெரும் துன்பங்களையும் தனிமையையும், ஆபத்துக்களையும் அனுபவித்துக்கொண்டு, தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் பயணம் செய்தார். நெதர் லாந்திலும், வடக்கு ஜெர்மனியிலும் பயணம்செய்து, தாழ்த்தப்பட்ட சமூகத் தினருக்கிடையில் வேலைசெய்து, பரந்த செல்வாக்கை ஏற்படுத்தினார். குறைந்த கல்வியையே பெற்றிருந்தாலும் அசையாத நேர்மை உள்ளவராக, இயல்பான பேச்சுவன்மை கொண்டவராக, தாழ்மையான ஆவி, சாதுவான தன்மை, உண்மையும் ஆர்வமுமிக்க பக்தி ஆகியவைகளோடு, எவைகளை போதித்தாரோ, அவைகளின்படி வாழ்ந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவரது பின்னடியார்கள் சிதறடிக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்ட வர்களாகவும் இருந்து மதவெறிமிக்க முன்ஸ்டெரிட்ஸ் என்பவர்களால் குழப்பப்பட்டனர். அப்படியிருந்தும் அவரது ஊழியத்தின்கீழ் பெரும் எண்ணிக்கையான மக்கள் மாற்றமடைந்தனர். (6)GCTam 269.2

    பொதுவாக நெதர்லாந்தைவிட வேறெங்கும் அதிகமான சீர்திருத்தக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில நாடுகளில் அதைச் சார்ந்தவர்கள் மிகப் பயங்கரமான உபத்திரவங்களைச் சகித்தனர். ஜெர்மனியில் ஐந்தாம் சார்லஸ் சீர்திருத்தத்தைத் தடை செய்து, அதைச் சார்ந்த அனைவரையும் கம்பங்களில் கட்டி எரிக்கப்பட கொண்டுவருவதற்கும் மகிழ்ச்சியாயிருந்தான். ஆனால் அவனது கொடுங்கோன்மைக்கு எதிரான தடையாக இளவரசர்கள் இருந்தனர். நெதர்லாந்தில் அவனது வல்லமை அதிகமாக இருக்கவே, உபத்திரவப்படுத்தும் கட்டளைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்தன. வேதாகமத்தை வாசித்தல், அதைக் கேட்டல், பிரசங்கித்தல், அதைப்பற்றிப் பேசுவதுங்கூட தண்டனையை அல்லது தீயை கொண்டுவந்தது. இரகசியமாக தேவனை நோக்கி ஜெபித்தல், ஒரு சிலையின்முன் குனிந்து வணங்க மறுத்தல், ஒரு சங்கீதத்தை வாசித்தல் ஆகியவைகளுங்கூட மரணதண்டனைக்குரியவைகளாக இருந்தன. தங்களது தவறுகளைவிட்டு விலகும்படி அவைகளை மறுக்கும் சபதம் செய்பவர்களுங்கூடக் குற்றவாளிகளாக்கப்பட்டனர். அவர்கள் ஆண்களாக இருந்தால், பட்டயத்தால் சாகவேண்டும். பெண்களாக இருந்தால் உயிருடன் புதைக்கப்படவேண்டும். உறுதியாக நின்றிருந்தவர்கள் சில சமயங்களில் இதே தண்டனையை அனுபவித்தனர். சார்லஸ், இரண்டாம் பிலிப் ஆகியோரின் ஆட்சியின்கீழ் ஆயிரக்கணக்கானவர்கள் அழிந்தனர். (7)GCTam 270.1

    ஒரு சமயம் மதவிரோதம் சம்பந்தமாக விசாரணை செய்பவர் களின்முன், திருப்பலி பூசைக்கு வராமலிருந்து வீட்டில் ஆராதனை செய்தனர் என்று குற்றச்சாட்டுடன், ஒரு குடும்பம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. அவர்களது இரகசியமான வழக்கம்பற்றி விசாரித்தபோது, எல்லோரிலும் இளைய மகன் “நாங்கள் முழங்காலில் நின்று, தேவன் எங்கள் உள்ளங்களைப் பிரகாசிக்கச்செய்து, எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களது அரசரின் ஆட்சி சிறப்படையவேண்டும் என்றும், அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டுமென்றும் ஜெபிக்கிறோம் தேவன் எங்கள் நீதிபதிகளை பாதுகாக்கவேண்டுமென்றும் ஜெபிக்கிறோம்’ என்று கூறினார்.—Wylie, b. 7, ch. 6. இதைக்கேட்ட நீதிபதிகளில் சிலர் ஆழமாக நெகிழ்ந்தனர். அப்படியிருந்தும் தந்தையும், மகன்களில் ஒருவரும் நெருப்புக் கம்பத்தில் கட்டிவைத்து எரிக்கப்பட அனுப்பப்பட்டனர். (8)GCTam 270.2

    உபத்திரவம் செய்பவர்களின் கோபம் இரத்தசாட்சிகளின் விசுவாசத் தினால் சமநிலைப்படுத்தப்பட்டது. ஆண்கள்மட்டுமல்ல, மென்மையான இளம்பெண்களுங்கூட, பின்வாங்காமல் தங்கள் தைரியத்தை வெளிக்காட்டினர். நெருப்பைத் தாங்கிக்கொண்டிருந்த அவர்களது கணவர்களுக்கருகில் மனைவிகள் நின்று, தேறுதலான வார்த்தைகளை மெல்லக்கூறி, அல்லது தாவீதின் சங்கீதங்களைப் பாடி அவர்களை உற்சாகப்படுத்தினர். இளம் பெண்கள் தங்களது படுக்கையறைக்கு இரவில் துயிலச்செல்லுவதுபோல், உயிருடன் கல்லறைகளில் நுழைந்தனர். அல்லது மிகச் சிறந்த ஆடைகளை உடுத்தி, திருமணத்திற்குச் செல்வதுபோல் கழுமரத்திற்கும் நெருப்புக்கம்பத்தில் எரிக்கப்படவும் சென்றனர்.--Ibid., b. 18, ch. 6. (9)GCTam 271.1

    அஞ்ஞான மார்க்கத்தின் நாட்களில், சத்தியத்தை அழிக்க வகைதேடியபோது, கிறிஸ்தவர்களின் இரத்தம் விதையாக இருந்தது. (See Tertullian, Apalogy, paragraph 50). உபத்திரவம் சத்தியத்திற்குச் சாட்சியாக இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது. மேற்கொள்ளமுடியாத மக்களின் தீர்மானத்தினால் வெறிபிடித்தவனாகும் வண்ணம் விஷத்தினால் கொட்டப்பட்டவனைப்போல வெறிபிடித்த அரசன், வருடாவருடம் தனது கொடூரமான பணியில் வீணாகத் தீவிரமடைந்தான். ஆரஞ்சு என்ற இடத்திலிருந்து மதிப்புமிக்க வில்லியம் என்பவரால் இறுதியாக நடத்தப்பட்ட புரட்சியானது, ஹாலந்திற்குத் தொழுகையின் சுதந்திரத்தைக் கொண்டுவந்தது. (10)GCTam 271.2

    பிட்மாண்ட் மலைகளில், பிரான்ஸின் சமவெளிகளிலும் ஹாலந்தின் கடற்கரையிலும் சுவிசேஷத்தின் முன்னேற்றம் அதன் சீடர்களின் இரத்தத்தால் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் வட பகுதியிலிருந்த மாநிலங்களில் அது அமைதியாக நுழைந்தது. விட்டன்பர்க்கிலிருந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பிய மாணவர்கள், சீர்திருத்த விசுவாசத்தை ஸ்காண்டிநேவியாவிற்குச் சுமந்துசென்றனர். வெளியிடப்பட்ட லுத்தரின் எழுத்துக்களும் ஒளியைப் பரப்பின. ஊழல்கள், டாம்பீகம், கத்தோலிக்க சபையின் மூடநம்பிக்கை ஆகியவைகளிலிருந்து திரும்பிய வடதிசையிலிருந்த கடினமான மக்கள் தூய்மையும் எனிமையும் ஜீவனைத் தருவதுமான வேதாகமச் சத்தியங்களை வரவேற்கத் திரும்பினர். (11)GCTam 271.3

    டென்மார்க் சீர்திருத்தவாதியான டாசென் ஒரு விவசாயியின் மகன். தீவிரமான நுண்ணறிவு படைத்தவர் என்று அவர் சிறுவனாயிருக்கும்போதே சாட்சிபகரப்பட்டார். கல்வியின்மீது தாகமுடையவராக இருந்தார். ஆனால் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக, அவர் மடத்தில் நுழைந்தார். அங்கு அவரது வாழ்க்கையின் தூய்மை, சிரத்தை, நேர்மை ஆகியவை மேலதிகாரியின் ஆதரவைப் பெற்றன. எதிர்காலத்தில் சபைக்கு நல்ல சேவைசெய்யக்கூடிய திறமை அவரிடம் இருப்பதைத் தேர்வுகள் காட்டின. எனவே ஜெர்மனியிலோ அல்லது நெதர்லாந்திலோ இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஏதாவதொன்றில் அவருக்குக் கல்வி அளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அந்த இளைஞன் விட்டன்பர்கிற்கு மட்டும்செல்லக்கூடாது என்ற ஒரு தடையுடன், தனக்கு விருப்பமான வேறு பள்ளியைத் தானாகவே தெரிந்துகொள்ளும் அனுமதியைப் பெற்றான். சபயிைன் மேதை மதப்புரட்டு என்னும் விஷத்தினால் ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது என்று சமயத் துறவிகள் கூறினர்.(12)GCTam 271.4

    அக்காலத்திலிருந்த ரோம கோட்டைகளில் ஒன்றான கோலோன் என்ற இடத்திற்கு டாசென் சென்றார். தியானத்தினால் கடவுளை அறியலாம் என்ற மனிதர்களுடைய கோட்பாட்டின்மீது அவர் வெறுப்படைந்தார். அந்த சமயத்தில், லுத்தரின் எழுத்துக்கள் அவருக்குக் கிடைத்தன. ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அதை வாசித்தறிந்து, சீர்திருத்தவாதியின் தனிப்பட்ட உபதேசங்களை மகிழ்ச்சியோடு அறிந்துகொள்ள அதிகம் விரும்பினார். ஆனால் இப்படிச்செய்தால், அவரது மடாலயத் தலைவரைக் குற்றப்படுத்தி அவருடைய ஆதரவையும் இழக்கவேண்டும். அவரது தீர்மானம் விரைவில் எடுக்கப்பட்டது. குறுகிய காலத்தில் விட்டன்பர்க்கில் மாணவராகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டார். (13)GCTam 272.1

    அவர் டென்மார்க்கிற்குத் திரும்பிவந்தபின், மீண்டும் அவரது மடத்திற்குச் சென்றார். அவரை ஒரு லுத்தரன்வாதி என எவரும் சந்தேகிக்கவில்லை. அவர் தனது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் அவரது தோழர்களின் தவறான எண்ணங்களைத் தூண்டிவிடாமல், தூய்மையும் விசுவாசமும் பரிசுத்தமுமான வாழ்க்கைக்கு அவர்களை நடத்த முயற்சித்தார். அவர் வேதாகமத்தைத் திறந்து, அதன் மெய்ப்பொருளை விளக்கிக்கூறி, கடைசியில் பாவியின் நீதியாகவும், பாவியின் இரட்சிப்பிற்கான ஒரே நம்பிக்கையாகவும், கிறிஸ்து ஒருவர் மட்டும் தான் இருக்கிறார் என்று போதித்தார். ரோம மார்க்கத்தின் பாதுகாவலராக அவர் விளங்குவார் என்று அவர்மீது நம்பிக்கை வைத்திருந்த மடத்தின் அதிகாரியின் கோபம் மிகப் பெரியதாக இருந்தது. உடனடியாகத் தனது மேற்பார்வையில் இருந்து நீக்கி, கடினமான மேற்பார்வையின்கீழ், வேறொரு இடத்தில் தனிமையான அறையில் அடைத்துவைக்கப்பட்டார். (14)GCTam 272.2

    அவரது புதிய பாதுகாப்பாளர்களுக்கு திகில் உண்டாகும் வண்ணம் சந்நியாசிகளில் அநேகர் தாங்கள் புரொட்டஸ்டாண்டு மார்க்கத்திற்கு மாறிவிட்டதாக அறிவித்தனர். டாசென் தனது அறையின் கம்பிகளின் இடைவெளியின்மூலம் சத்தியத்தைப்பற்றிய அறிவை தனது நண்பர்களுக்குக் கொடுத்தார். மதவிரோதத்தைச் சமாளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் காரியத்தில் அந்த டேனிஷ்குருமார்கள் திறமையானவர்களாக இருந்திருந்தால், டாசெனின் குரல் மீண்டும் ஒருபோதும் கேட்கப்பட்டிருக்காது, பூமிக்கடியிலிருந்த ஏதாவதொரு நிலவறையின் கல்லறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, அவரை மடாலயத்திலிருந்து வெளியேற்றினார்கள். இப்பொழுது அவர்கள் வல்லமையற்றவர்களாக இருந்தார்கள். அச்சமயம் வெளியிடப்பட்ட அரசின் கட்டளை, புதிய கோட்பாட்டின் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பைத் தந்தது. டாசென் பிரசங்கம்செய்யத் தொடங்கினார். எங்கும் ஆலயங்கள் திறக்கப்பட்டன. அவரது சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளாகப் பெருமளவில் கூடினார்கள். மற்றவர்களும் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கித்தனர். டேனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு எங்கும் விநியோகிக்கப்பட்டது. அந்தப் பணியைக் கவிழ்க்கவேண்டுமென்று பேப்பு மார்க்கவாதிகள் செய்த முயற்சி அதனை மேலும் விரிவடையச்செய்தது. அதற்குப்பின் டென்மார்க் தேசம் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. (15)GCTam 272.3

    ஸ்வீடனிலுங்கூட, விட்டன்பர்க் கிணற்றிலிருந்து பருகிய இளைஞர்கள் ஜீவத் தண்ணீரைத் தங்கள் நாட்டு மக்களுக்குச் சுமந்து சென்றனர். ஓரிப்ரோ என்னுமிடத்திலிருந்த ஒரு கொல்லனின் மகன்களான, ஓலாப், லாரென்டியஸ் பெட்ரி என்ற இரு இளைஞர்களும் தாங்கள் லுத்தர் மெலாங்தன் ஆகியோரிடம் பயின்ற சீர்திருத்தத்தின் சத்தியங்களைப் போதிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். லாரென்டியஸ் மெலாங்தனைப்போல கல்வியும் சிந்தனையும் அமைதியும் மிக்கவராக இருந்தபோது, ஓலாப் அவரது வைராக்கியத்தினாலும், பேச்சுத் திறமையினாலும் மக்களை எழுப்பினார். இருவரும் உறுதியான பக்தி, உயர்ந்த இறையியலறிவு, சத்தியத்தை முன்கொண்டுசெல்லுவதில் குன்றாத தைரியம் உள்ள மனிதர்களாக இருந்தனர். போப்புமார்க்கத்தின் எதிர்ப்பு குறைவாக இருக்கவில்லை. அறிவின்மையும், மூடநம்பிக்கையுமிக்க கத்தோலிக்கப் பாதிரிமார்கள் தூண்டிவிட்டார்கள். ஓலாப், பெட்ரி இருவரும் பயங்கரவாதிகளின் கூட்டத்தினரால் அடிக்கடி தாக்கப்பட்டு பல சமயங்களில் உயிர்தப்பிப் பிழைத்தனர். இருந்தபோதும் இந்தச் சீர்திருத்தவாதிகள் அரசனால் காக்கப்பட்டனர். ரோம மார்க்கத்தின் ஆளுகையின்கீழ் மக்கள் வறுமையில்மூழ்கி, ஒடுக்குதலினால் நசுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வேதவாக்கியங்கள் இல்லாமல் கைவிடப்பட்டவர்களாக, மனதிற்கு ஒளியைக் கொண்டுவராத, அடையாளங்களையும் சடங்காச்சாரங்களையும் மட்டுமே உடைய ஒரு மதத்தை உடையவர்களாக இருந்து, தங்கள் அஞ்ஞான முன்னோர்களின் மூடநம்பிக்கைகளுக்கும், அஞ்ஞான பழக்கங்களுக்கும் திரும்பிக்கொண்டிருந்தனர். ஒன்றை ஒன்று எதிர்க்கும் அணிகளின் நிரந்தரச் சண்டைகளினால் அந்த நாடு பிரிந்து, எல்லோரது துன்பத்தையும் அதிகரிக்கச் செய்திருந்தது. நாட்டிலும் சபையிலும் சீர்திருத்தம் உண்டாகவேண்டுமென்று அரசன் தீர்மானித்து, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கெதிரான சண்டையில் துணைவர்களாக இருக்கத் தகுதியான இவர்களை வரவேற்றார். (16)GCTam 273.1

    அரசனுக்கும் சுவீடன் தேசத்து முன்னணி மனிதர்களுக்கும்முன் கத்தோலிக்க மார்க்கத்திற்கு எதிராக ஓலாப், பெட்ரி சீர்திருத்த விசுவாசக் கோட்டிாடுகளைத் தற்காத்துப் பேசினர். முற்பிதாக்களின் போதனைகள் வேதவாக்கியங்களுக்கு இசைவாக இருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் அறிவித்தார். ஏனெனில், விசுவாசம்சம்பந்தப்பட்ட முக்கியமான கோட்பாடுகள் எல்லா மனிதர்களும் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய உபதேசங்கள் என்னுடையவைகள் அல்ல என்னை அனுப்பினவருடையவையாக இருக்கின்றன (யோவான் 7:16). நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் (கலா. 1:8) என்று வேதம் சொல்லியிருக்கும்போது கோட்பாடுகளை அவர்களது விருப்பப்படி இயற்றி, அவை இரட்சிப்பிற்கு அவசியமானவைகள் என்று கூறி உபதேசிக்கலாமா? என்று சீர்திருத்தவாதிகள் வினவினர். சபையின் கட்டளைகள் தேவப் பிரமாணங்களுக்கு எதிராக இருக்கும்போது, அவைகள் அதிகாரம் உடையவைகள் அல்ல என்றும், வேதாகமம்! வேதாகமம் மட்டுமே! விசுவாசத்தின் சட்டமாகவும் நடைமுறையாகவும் உள்ளது என்பதே புரொட்டஸ்டாண்டு மார்க்கத்தின் கொள்கை என்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.(17)GCTam 274.1

    இந்த போட்டி, ஒப்பிடத்தக்க ஒரு இருண்ட மேடையின்மீது நடத்தப்பட்டிருந்தாலும், “சீர்திருத்தத்தின் சேனையில் எப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள்” என்று நமக்குக் காட்டுகிறது. அவர்கள் கற்றவர்களல்ல; வகுப்புவாதிகளல்ல; சர்ச்சைக்குறியவர்களுமல்ல. அவைகளிலிருந்து வெகு தூரம் சென்று, தேவனின் வார்த்தைகளை படித்து, வேதாகமமாகிய ஆயுத சாலை வழங்கிய போர்க்கருவிகளை நன்கு பிரயோகிக்க அறிந்தவர்கள். புலமையில் அவர்கள் காலத்தைவிட உயர்ந்திருந்தார்கள். நமது கவனத்தை விட்டன்பர்க் மற்றும் ஜுரிச் போன்ற ஒளிமிக்க இடங்களுக்கும், அவைகளில் இருந்த லுத்தர், மெலாங்தன், ஸ்விங்ளி, ஓகோலாம்பேடியஸ் ஆகிய புகழ்மிக்க பெயர்களுக்கும் செலுத்தும்போது, அந்த இயக்கத்தின் தலைவர்களாக இருந்த அவர்கள் மிகப்பெரும் வல்லமையும் திறமையும் கொண்டிருந்திப்பார்கள் என்றே இயற்கையாக எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த அப்படிப்பட்டவர்கள் அல்ல. ஸ்வீடனிலிருந்த பிரபலமில்லாத அரங்கங் களுக்கும் ஓலாப், லாரெம்டியஸ் என்கிற தாழ்மையானவர்களுக்கும்- தலைவர்களிலிருந்து ஊழியக்காரர்கள்வரை திரும்பிப்பார்க்கும்போது என்ன அறிகிறோம்? படிப்பாளிகனையும் இறையியல் வல்லுனர்களையும் சுவிசேஷ சத்தியத்தின் முழு அமைப்பையும் முழுமையாக படித்துத் தேறின, ரோமமார்க்கத்தின் மேன்மைமிக்கவர்களின்மீதும், பள்ளி ஆசிரியர்களின்மீதும் எளிதில் ஜெயம்கொண்டவர்களைத்தான்!”—Ibid., b. 13, ch. 6. (18)GCTam 274.2

    இந்தவாக்குவாதத்தின்விளைவாக, சுவீடனின் அரசன்புரொட்டஸ்டாண்டு விசுவாசத்தை ஏற்றுக்கொண்டான். அதன்பின் சில நாட்களுக்குள், தேசிய மன்றமும் அதற்கு அனுகூலமாயிருப்பதை அறிவித்தது. புதிய ஏற்பாடு, ஓலாப் பெட்ரியால் சுவீடன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின் அரசனின் விருப்பப்படி, அந்த இரு சகோதரர்களும் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். இவ்வாறாக சுவீடன் மக்கள் முதன் முறையாகத் தங்களது சொந்த மொழியில், தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டனர். நாடு முழுவதிலும் உள்ள போதகர்கள் வேத வாக்கியங்களை விளக்கிச் சொல்லவேண்டுமென்றும், பள்ளிகளில் உள்ள சிறுவர்கள் வேதாகமத்தை வாசிக்கக் கற்பிக்கப்படவேண்டும் என்றும், பிரதிநிதிகளின் சபை கட்டளை பிறப்பித்தது. (19)GCTam 275.1

    ஆசீர்வாதமிக்க சுவிசேஷ ஒளியினால், அறியாமை மூடநம்பிக்கை ஆகியவைகளினால் உண்டான இருள் சீராகவும் நிச்சயமாகவும் நீக்கப்பட்டது. கத்தோலிக்க நிர்வாகத்தின் ஒடுக்குதலில் இருந்து விடுதலை அடைந்த அந்த நாடு, அதுவரை ஒருபோதும் அடைந்திராத பலத்தையும் பெரிய நிலையையும் அடைந்தது. புரொட்டஸ்டாண்டு இயக்கத்தின் கோட்டைகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்குப்பின், மிகவும் அபாயகரமான காலத்தில், மிகவும் சிறியதாக இதுவரை பலவீனமானதாக இருந்த இந்த நாடு உதவிக்கரம் நீட்டத்துணிந்த ஐரோப்பாவின் ஒரே ஒரு நாடாக முப்பது வருடங்களாகத் தொடர்ந்த பயங்கரமான போரில் ஜெர்மனியின் விடுதலைக்கு உதவியது. வடக்கு ஐரோப்பா முழுவதும் ரோமின் கொடுங்கோன்மையின்கீழ் மீண்டும் கொண்டுவரப்படப் போவதுபோல் காணப்பட்டது. ஸ்வீடனின் படைகள்தான், போப்புமார்க்கத்தின் வெற்றிகளைத் திசைதிருப்பிடவும், புரொட்டஸ்டாண்டுகளான லுத்தரன்களையும் கால்வினிஸ்டுகளையும் சகித்துக்கொள்ளும் வெற்றியைக் கொண்டுவரவும், சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டிருந்த நாடுகளில் மனசாட்சியின் சுதந்திரத்தை நிலைநிறுத்தவும் ஜெர்மனிக்கு உதவியது. (20)GCTam 275.2