Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத் தூதர்களின் ஒத்துழைப்பு

    தூதர்களுடைய ஊழியப்பணிபற்றி நாம் அறிந்திருப்பதை விட இன்னமும் சிறப்பாக அறிந்துகொள்வது அவசியம். தேவனுடைய உண்மையான பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் பரலோக ஜீவிகளின் ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. தேவ வாக்குறுதிகளை விசுவாசித்து, அவற்றை உரிமைகோருகிற சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களுக்கு கண்ணுக்குப் புலப்படாத ஒளியும் வல்லமையுமுள்ள சேனைகள் உதவுகின்றன. பராக்கிரமத்தில் நிகரற்ற கேரூபின்களும் சேராபீன்களும் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறார்கள். ‘இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களின் நிமித்தமாக ஊழியஞ் செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாக’ இருக்கிறார்கள். 2AA, 154 TamChS 338.1

    ஆண்டவராகிய இயேசு தலைமைப் பணியாள். விதைக்கப்பட்ட விதைக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். இருதயங்களைச் சென்றடைகிற வார்த்தைகளை உங்களுடைய சிந்தைகளில் தருகிறார். 39T, 41TamChS 338.2

    தேவஊழியத்திற்காக உங்களை முற்றிலும் அர்ப்பணியுங்கள். அவரே உங்கள் பெலன். தம் இரக்கமுள்ள திட்டங்களை நீங்கள் நிறைவேற்றும்படி உதவி செய்ய அவர் உங்கள் வலதுபாரிசத்தில் இருக்கிறார். 49T, 41TamChS 338.3

    குறைபாடற்ற செயலுள்ளவர்களாக நம்மை விளங்கச் செய்கிற குணப்பூரணத்துடனும் விசுவாசத்தில் உறுதியுடனும் முயல்கிற மனிதர்களோடு சேர்ந்து பரலோக அறிவுஜீவிகள் பிரயாசப்படுவார்கள். இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரிடமும், “உனக்கு உதவிசெய்ய உன்னுடைய வலதுபாரிசத்தில் நான் இருக்கிறேன்” என்று கிறிஸ்து சொல்கிறார். 5 COL, 332TamChS 338.4

    மனித சித்தம் தேவ சித்தத்துடன் ஒத்துழைக்கும்போது, அது சர்வ ஆற்றல் படைத்ததாக மாறுகிறது. அவர் கட்டளையிடுகிற எதையும் அவருடைய பெலத்தால் சாதிக்கச்செய்கிறது. அவர் கட்டளைகள்யாவும் பெலம்தரும் சக்திவாய்ந்தவை. 6COL, 333TamChS 338.5

    அழிந்துபோகிற ஆத்துமாக்களுக்காக ஊதியம் செய்யும்போது, தூதர்களின் ஒத்தாசை உங்களுக்குக் கிடைக்கும். மற்றவர்கள் கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாகும்படிக்கு, நம் சபை அங்கத்தினர்கள் தேவன் தங்களுக்குக் கிருபையாகக் கொடுத்திருக்கிற வெளிச்சத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக திருச்சபை அங்கத்தினர்களோடு ஒத்துழைக்க ஆயிரம் பதினாயிரம் தூதர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். 19T, 129TamChS 339.1

    இந்த ஊழியத்தில் ஒத்துழைப்பதற்கு பரலோகத் தூதர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். தொலைந்துபோனோரை இரட்சிக்க முயல்கிறவர்கள் கேட்டுக்கொள்ளும் தூரத்தில்தான் பரலோகத்தின் வள ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. அதிக அக்கறையற்றும் அதிக கடினப்பட்டும் இருப்போரை ஆதாயப்படுத்த தூதர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஒருவர் மீண்டும் தேவனிடம் கொண்டுவரப்படும்போது, பரலோகம் முழுவதுமே சந்தோஷப்படுகிறது, சேராபீன்களும் கேருபீன்களும் தங்களுடைய பொன்சுரமண்டலங்களைப் பிடித்து, மனுபுத்திரர் மேல் இரக்கமும் அன்பின் மனதுருக்கமும் காட்டின தேவனையும் ஆட்டுக்குட்டியானவரையும் துதித்துப்பாடுகிறார்கள். 2COL, 197TamChS 339.2

    கலிலேய மீனவர்களை அழைத்தவர்தாமே இன்றும் மனிதர்களை தம் சேவைக்காக அழைக்கிறார். முதல் சீடர்களைப்போல நம் மூலமாகவும் தம் வல்லமையை வெளிப்படுத்த அவர் சித்தமாக இருப்பதில் நியாயமுள்ளவராக இருக்கிறார். நாம் எவ்வளவுதான் பாவிகளாகவும் பூரணமற்றவர்களாகவும் இருந்தாலும், தம்மோடு சேர்ந்து ஊழியம் செய்யவும், கிறிஸ்துவின்கீழ் பயிற்சிபெறவும் அவர் நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். 3DA, 297TamChS 339.3

    தமக்காக முற்றிலும் அர்ப்பணித்து வாழ்கிறவர்களை கிறிஸ்து பெரிதாக மதிக்கிறார் என்பதை நீங்கள் யோசிப்பதில்லையா? யோவானைப்போல தம் நிமித்தமாக கடினமான, சோதனைமிக்க இடங்களில் இருப்பவர்களை அவர் சென்று சந்திக்கிறார் என்பதை நீங்கள் யோசிப்பதில்லையா? தமக்கு உண்மையானவர்களைக் காண்கிறார்; அவர்களோடு ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார்; அவர்களை பெலப்படுத்தி, ஊக்கப்படுத்துகிறார். சத்தியத்தை அறியாதோருக்கு சத்தியத்தை அறிவிக்கிற பணியைச் செய்கிற மனிதர்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு பெலத்தில் மிஞ்சிய தேவதூதர்களை தேவன் அனுப்புகிறார். 48T, 17TamChS 339.4

    பரலோகம் முழுவதுமே மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது; கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அந்த ஆத்துமாக்கள் இரட்சிப்பின் நற்செய்தியைக் கேட்கும்படி திட்டங்களை வகுப்போருடன் ஒத்துழைப்பதற்கு தேவதூதர்கள் காத்திருக்கிறார்கள். இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களுக்கு ஊழியம் செய்கிற தூதர்கள், பரிசுத்தவான்கள் ஒவ்வொருவரிடமும், “நீங்கள் செய்யவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. நீங்கள் போய், இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள்” என்று சொல்கிறார்கள். அப் 5:20.இவ்வாறு யாரிடம் சொல்லப்பட்டதோ, அவர்கள் இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தால், ஆண்டவர் அவர்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்தி, அதில் செல்வதற்கான வசதி வாய்ப்புகளை அவர்களுக்குக் கொடுக்கிறார். 16T, 433,434TamChS 340.1

    இத்தகைய சமயங்களில் தேவபிள்ளைகள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தோடு உதவவேண்டும். வெளிச்சத்தைக் காண ஏங்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவ, வேதசத்தியத்தை அறிந்தவர்கள் முயலும்போது, அவர்களுக்குத் தேவதூதர்கள் துணைசெய்வார்கள். இவ்வாறு தூதர்கள் முன்செல்லும்போது, ஊழியர்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. அபிஷேகம் பெற்ற ஊழியர்கள் செய்கிற மெய் ஊழியத்தின் விளைவால், அநேகர் சிலை வழிபாட்டிலிருந்து விலகி, ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்வார்கள். மனிதரால் ஏற்படுத்தப்பட்ட காரியங்களுக்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்திவிட்டு, தேவன்பக்கத்தில் அவருடைய பிரமாணத்திற்காக நிற்பதற்கான தீர்மானத்தை அநேகர் எந்தப் பயமுமில்லாமல் எடுப்பார்கள். 2PK, 171TamChS 340.2

    தேவனுடைய ஊழியர்கள், அதைரியமான சூழல்களின்கீழ் இப்போது ஈடுபட்டிருக்கும் போராட்டத்தை வானமண்டலத்தின் துரைத்தனங்களும் அதிகாரங்களும் பார்க்கின்றன. கிறிஸ்தவர்கள் தங்கள் மீட்பருடைய கொடியைச் சுற்றிலும் அணிவகுத்து, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட செல்லும்போது, புதிய வெற்றிகளைப் பெறுகிறார்கள். புதிதாக நன்மதிப்புகளைப் பெறுகிறார்கள். தாழ்மையும் விசுவாசமும் உள்ள தேவ மக்களுக்குச் சேவை செய்வதில் பரலோகத் தூதர்கள் அனைவருமே ஈடுபட்டுள்ளார்கள்; இங்கே தேவனுடைய ஊழிய வீரர்கள் துதியின் பாடல்களைப் பாடும்போது, தேவனுக்கும் அவருடைய குமாரனுக்கும் துதியை ஏறெடுப்பதில் பரலோகத்தில் அங்கு பாடற்குழுவினரும் சேர்ந்துகொள்ளுகிறார்கள். 3AA, 154 TamChS 340.3

    பணியை வெற்றிபெறச்செய்வது மனிதர்களிடமிருந்து புறப்படுகிற வல்லமை அல்ல; மனித ஏதுகரத்தோடு சேர்ந்து வேலை செய்கிற பரலோக அறிவுஜீவிகளின் வல்லமைதான் பணியைப் பூரணப்படுத்துகிறது. ஒரு பவுல் நடலாம்; ஒரு அப்பல்லோ தண் ணீர் பாய்ச்சலாம்; ஆனால், தேவன் தாம் விளையச்செய்கிறார். பணியில் தேவன் செய்யவேண்டிய பங்கை மனிதன் செய்யமுடியாது. மனித ஏதுகரமாக தெய்வீக அறிவு ஜீவிகளுடன் அவன் ஒத்துழைக்கலாம், தேவன் தாம் மாபெரும் தலைமைப் பணியாளர் என்பதை உணர்ந்து தாழ்மையோடும் சாந்தத்தோடும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகச் செய்யலாம். பணியாட்கள் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டாலும், பணிநின்றுவிடாது; அது நிறைவேறும் வரையிலும் தொடரும். 1 RH, Nov. 14, 1893TamChS 341.1

    ஒரு மகத்தான உதவியாளர் கிறிஸ்தவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு. தேவன் உதவும் விதத்தை நாம் அறியாதிருக்கலாம்; ஆனால், ‘தேவன்மேல் நம்பிக்கை வைப்பவர்களை தேவன் ஒரு போதும் கைவிடமாட்டார்’ என்பது நிச்சயம். தங்களைக்குறித்துச் சத்துரு போடுகிற திட்டங்கள் நிறைவேறக்கூடாதபடி, தேவன் எத்தனை முறை தங்கள் பாதையை ஒழுங்கமைத்தார் என்பதைக் கிறிஸ்தவர்கள் உணரக்கூடுமானால், வழிநெடுக தாங்கள் குறைகூறிக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் இருப்பதை நிறுத்திவிடுவார்கள். அவர்களுடைய விசுவாசம் தேவனில் நிலைகொண்டிருக்கும்; அவர்களைத் தடுமாறச் செய்கிற ஆற்றல் எந்தச் சோதனைக்கும் இராது. அவரையே தங்கள் ஞானமாகவும் திறனாகவும் ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மூலமாக தாம் செய்ய விரும்புவதை அவர் நிறைவேற்றி முடிப்பார். 2 PK, 576 TamChS 341.2

    ஊழியத்தில் ஈடுபட்டுள்ள அனைவருமே தேவனின் உதவிக்கரமாக இருக்கிறார்கள். தூதர்களோடு சேர்ந்து பணிசெய்யும் உடன் வேலையாட்களாக இருக்கிறார்கள். அதுதவிர, மனித ஏது கரங்களாகிய அவர்கள் மூலம்தான் தூதர்கள் தங்கள் ஊழியப்பணியை நிறைவேற்றுகிறார்கள். தூதர்கள் அவர்கள் மூலம் பேசுகிறார்கள்; அவர்களுடைய கரங்கள் மூலம் வேலைசெய்கிறார்கள். பரலோக ஏதுகரங்களோடு ஒத்துழைக்கிற ஊழியர்களாகிய மனிதர்கள் அவர்களிடமிருந்து கல்வியும் பயிற்சியும் கிடைக்கிற நன்மையைப் பெறுகிறார்கள். 3 Ed, 271TamChS 341.3

    நீதி எனும் தம் கவசத்தைத் தரித்து, பணிசெய்யத் துவங்கும் படி ஒவ்வொரு மனிதனையும் கிறிஸ்து அழைக்கிறார். ‘உனக்கு உதவி செய்ய உன்னுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறேன்’ என்று சொல்கிறார். உங்களுடைய எல்லாப்பாடுகளையும் குழப்பங்களையும் தேவனிடம் சொல்லுங்கள். உங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக அவர் நடந்துகொள்ளவே மாட்டார். கிறிஸ்து தாம் விலைகொடுத்து வாங்கின தம் சம்பத்தாகிய தம் திருச்சபையையும் சத்தியத்தின் விதைகளை விதைப்பதற்குச் செல்கிற பணியாளர்களையும் விட அவருக்கு முக்கியமானது எதுவுமே இல்லை. இயேசுவைப்பற்றிச் சிந்தியுங்கள். அவர் தம் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார்; அவர் தனியாக இல்லை; அவருடைய கட்டளையை நிறைவேற்ற பதினாயிரம் பதினாயிரமான தூதர்கள் அவர்களைச் சுற்றிலும் காத்திருக்கிறார்கள். தேவன்மேல் தன் நம்பிக்கையை வைத்துள்ள மிகவும் பெலவீனமான பரிசுத்தவானுக்குச் சேவை செய்வதற்காகச் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே அளவில் தான் உதவி வழங்கப்படுகிறது. 1SW, Nov. 7, 1905TamChS 341.4